ஆனந்த விகடன் இதழில் தொடங்குகிறது, நரன் எழுதும் 'ஆயிரம் சூரியன்கள்' வரலாற்றுப் பு...
"15 வயசுல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க; அதனால பல விஷயங்களை மிஸ் பண்ணேன்" - கம்பம் மீனா
சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.
எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.
விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வந்த நிலையில், அந்தத் தொடர் முடிவடைந்ததும் இதோ இப்போது ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் ‘அய்யனார் துணை’யிலும் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுவும் இந்தச் சீரியலில் நடிகர் ரோசரியின் முன்னாள் காதலியாக நடித்து வருகிறார்.
ஷூட்டிங் இடைவேளையில் சந்தித்து, 'காதல், அதில் தோல்வியடைந்தது போன்ற விஷயங்கள் நிஜவாழ்க்கையில் நடந்திருக்கிறதா’ என்று கேட்டோம். பழைய நினைவுகளைப் பகிரத் தொடங்கினார்.

‘’அப்ப நான் பத்தாவது படிச்சிட்டிருந்தேன். பள்ளிக்கூடத்துல படிச்சிட்டிருக்கிறப்ப கூடப் படிக்கிற பசங்க பேனா பென்சில் வாங்கித் தர்றதையெல்லாம் கூட காதல்னு மத்தவங்க கேலியா பேசுவாங்க. பக்கத்து வீட்டுப் பையன் கூட சேர்ந்து நடந்தபடி பள்ளிக்கூடம் போறதைப் பார்த்தாலே ஒரு கூட்டம் கேலி செய்துகிட்டே பின்னாடி வரும். அதையெல்லாம் எப்படிங்க லவ்னு சொல்ல முடியும்? சொல்லப் போனா காதல்னா என்னன்னே சரியா தெரியாது. அப்படிப் பேசவே பயமாவும் இருக்கும்.
தவிர அப்ப பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சதுமே கல்யாணம் செய்து கொடுத்துடுவாங்க. எங்க வீட்டுல என் அக்காவை 11 வது படிச்சிச்சிட்டிருக்கிறப்ப எங்க மாமா மகனுக்குக் கட்டிக் கொடுத்தாங்க. எனக்கும் பத்தாவது முடிக்கிறதுக்கு ரெண்டு மாசம் இருக்கும் போதே கல்யாணப் பேச்சு தொடங்கிடுச்சு. எங்க இன்னொரு மாமா மகன் தயாரா இருந்தார்.
சொந்தம் விடுபட்டுடக் கூடாதுனு எங்க பகுதியில முக்கால்வாசி பேர் சொந்தத்துலதான் கல்யாணம் செய்வாங்க. எனக்கும் அதேதான் நடந்தது.
வயசு15. அன்னைக்குத் தேதிக்கு அது குழந்தைத் திருமணம்தான். ஆனா யாரோட எதிர்ப்பும் இல்லாம நடந்தது.

எனக்கு கல்யாணத்தைப் பிடிக்காம இல்ல, அதை நினைச்சு கொஞ்சம் பயம் இருந்ததால் ’மேற்கொண்டு கொஞ்சம் படிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கிடுறேனே’னு சொன்னேன். அப்ப பத்தாவது முடிச்சிட்டு டீச்சர் ட்ரெய்னிங் சேரலாம்னு இருந்தது. ஊர்ல இருந்த ஒரு அக்கா மூலமா அதுக்கு அப்ளை செய்து வரவும் சொல்லியிருந்தாங்க.
ஆனா வீட்டுல ‘உன் ஜாதகத்தை ஜோசியர் கிட்ட காமிச்சப்ப, படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் ஆகும்’னுதான் சொன்னார்னு சொல்லி என் விருப்பத்தைக் கண்டுக்காம கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டாங்க.
அதுக்காக அழுதுகிட்டெல்லாம் தாலி கட்டிக்கலை. ஆனா கொஞ்சம் திரும்பிப் பார்த்தா நிறைய விஷயங்களை மிஸ் பண்ணின ஒரு ஃபீல் அப்பப்ப வரும். காலேஜ் படிக்கிற, வேலைக்குப் போற பெண்களைப் பார்க்குறப்பெல்லாம் ஒரு ஏக்கம் வரும்.
அதனாலேயே ரெண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு விருப்பப்பட்டு கொஞ்ச காலம் எல்.ஐ.சி ஏஜெண்ட்டா இருந்தேன்.
பிறகு வாழ்க்கை எங்கெங்கோ போய் நான் நினைச்சே பார்க்காத சினிமா பக்கம் வந்து இன்னைக்கு பசங்களுக்கும் கல்யாணமெல்லாம் பண்ணி வச்சுட்டு நிம்மதியா நடிச்சிட்டிருக்கேன்’’ என்றவர்,
‘இதனாலேயே பாருங்க, லவ் ஃபெயிலியர் சீன் ஏதாவது இருந்தா. கூட நடிச்சிட்டிருக்கிற சின்ன வயசு ஆர்ட்டிஸ்டுகள் கிட்ட யாராவது லவ் ஃபெயிலியர் ஆள் இருக்கீங்களா, எனக்கு எக்ஸ்பிரஷன் சொல்லித் தர்றீங்களானு கேட்டு லந்து பண்ணுவேன்’ எனச் சிரிக்கிறார்.




















