பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து த...
TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?
செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருடன் டெல்லிக்கு சென்றார்.
டெல்லியில் விஜய்யின் ஆதரவாளர்கள் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதற்காக, எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் பல பிரிவுகள் சிபிஐ அலுவலகத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும், ஒரு சிறிய அளவிலான ரசிகர்கள் குழு சிபிஐ வளாகத்திற்கு அருகில் கூடியது.
அதைத் தொடர்ந்து, சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவின் குழு விஜய்யிடம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், 'கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் தனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல. மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்' என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் விஜய்க்கு முன்பு விசாரிக்கப்பட்ட த.வெ.க நிர்வாகிகளும் இதே பதிலைக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த வாக்குமூலங்கள் இப்போது பகுப்பாய்வு செய்யப்பட்டுகிறது. மேலும், கூட்ட நெரிசலுக்கு விஜய் தரப்பில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று முன்பு கூறியிருந்த காவல்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களும் இதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் முதல்நாள் விசாரணை நிறைவுற்ற நிலையில், இரண்டாவது நாளாக நாளை (ஜன. 13) காலை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.













