``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பா...
அதிமுக-வில் மீண்டும் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன்; திமுக மீது குற்றச்சாட்டு; பின்னணி என்ன?
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கெடு விதித்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தவெக-வில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2020-இல் செங்கோட்டையனுடன் முரண்பாடு ஏற்பட்டு அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த, அவரது சொந்த அண்ணன் மகனான கே.கே.செல்வம், இன்று திமுக-வில் இருந்து விலகி மீண்டும் அதிமுக-வில் இணைந்துள்ளது ஈரோடு மாவட்ட அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபிசெட்டியபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர்தான் கே.கே.செல்வம். செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகனான இவர், சிறுவயதிலிருந்தே தனது சித்தப்பாவுடன் சேர்ந்து அதிமுக-வில் பயணித்து வந்தார்.
அவருக்கும் செங்கோட்டையனுக்கு இடையே 2020-இல் ஏற்பட்ட முரண்பாட்டால், அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். திமுக-வில் செல்வத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, இரண்டு நாள்களுக்கு முன்னதாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செல்வத்தை திமுக தலைமை நீக்கியது.

செல்வம் திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன எனக் கட்சியின் சீனியர்களிடம் விசாரித்தோம். "செங்கோட்டையனிடம் முரண்பாடு ஏற்பட்டுதான் திமுக-வுக்கு செல்வம் வந்தார். அவருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும், அதிமுக மீதான பழைய பாசம் விட்டுப்போகவில்லை.
திமுக-விலும் கட்சி வேலைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில்தான், தனது சொந்த சித்தப்பாவான செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால், கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. செங்கோட்டையன் இடத்தைப் பிடிக்க திட்டமிட்ட செல்வம், அதிமுக மண்டலப் பொறுப்பாளரான எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து, தான் மீண்டும் அதிமுக-வில் இணையும் விருப்பத்தைத் தெரிவித்தார்.
இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு எட்ட அவரும் செல்வத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். இது உளவுத்துறை மூலமாக திமுக தலைமைக்கு எட்டவே, ஏற்கெனவே கொங்கு மண்டலம் திமுக-வுக்குப் பலவீனமாக உள்ளது.
அதிலும், செங்கோட்டையனின் அண்ணன் மகனான செல்வம் திமுக-வில் இருக்கும்போதே அதிமுக-வுக்குச் சென்றால் அது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும், எனவே, செல்வம் அதிமுக-வுக்குச் செல்லும் முன் அவசர அவசரமாக கட்சியில் இருந்து நீக்கி உள்ளது திமுக தலைமை" என்றனர். விரிவாக.

ஓரங்கட்டப்பட்டேன்
இதுகுறித்து செல்வத்திடம் பேசினோம். "செங்கோட்டையன் அதிமுக-வுக்குத் துரோகம் செய்துவிட்டு தவெக-வுக்குச் சென்றுவிட்டார். கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. நிறைய அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் நான் அதிமுக-வுக்கு மீண்டும் வர வேண்டுமென விரும்பினார்கள். அதனால், நான் அதிமுக-வுக்கு வந்துவிட்டேன்.
அதுமட்டுமில்லாமல், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரான நல்லசிவம் என்னை தொடக்கத்தில் இருந்தே ஓரங்கட்டி வந்தார். என்னைச் செயல்படவே அவர் விடவில்லை. மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் உள்ளேன்.
திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளரான கோபாலபுரம் எஸ்.ஏ. ரமேஷ், முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் பெயரைக் கூறிக் கொண்டு மருந்து வணிகர்கள் சங்கத்துக்குச் சொந்தமான சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரி மற்றும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பள்ளியை அபகரிக்க முயன்றார்.
இதுதொடர்பாக திமுக தலைமைக்குப் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து என்னை நீக்கினர். அதனால்தான் அதிமுக-வுக்கே மீண்டும் வந்துவிட்டேன்" என்றார்.


















