"அம்மா, அப்பா சாரி... தவறான முடிவை எடுக்கிறேன்" - நீட் தேர்வு பயத்தால் மாணவர் வி...
"அம்மா, அப்பா சாரி... தவறான முடிவை எடுக்கிறேன்" - நீட் தேர்வு பயத்தால் மாணவர் விபரீத முடிவு
"இப்படியான பெற்றோர், சகோதரன் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன், நீட் தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்துவிடுவேனோ என்ற பயத்தால் தவறான முடிவை எடுக்கிறேன்" என்று வெற்றியானந்தம் என்ற மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூரில் வசித்து வரும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி-உத்திரகுமாரி தம்பதியின் இரண்டாவது மகன் வெற்றியானந்தம்.
மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட வெற்றியானந்தம், கடந்த 3 ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்து நீட் தேர்வு எழுதி வந்தார். அதில் வெற்றி பெற முடியாததால் சோர்வடைந்தவரை, பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி தொடர்ந்து தயார்படுத்தி வந்தனர்.
தீவிரமாகப் பயிற்சி எடுத்து கடந்த மாதம் 4 வது முறையாக தேர்வு எழுதினார். வினாத்தாள் வெளியான புகாரில் அத்தேர்வு ரத்தானதால் மிகவும் விரக்தி அடைநதார்.
இருந்தாலும், மனம் தளராமல் நேற்று நடந்த நீட் மறுதேர்வை எதிர்கொள்ள ஓசூரிலுள்ள பயிற்சி மையம் மூலம் தயாராகி வந்த நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்கு வந்த பெற்றோர்கள், மகன் தூக்கிட்டு உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தி வெற்றியானந்தத்தின் உடலை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வெற்றியானந்தம் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அக்கடித்தில், "இப்படியான பெற்றோர் சகோதரன் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன். நீட் தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்துவிடுவேனோ என்ற பயத்தால் கடந்த ஒரு மாதமாகச் சரியாக தூங்கவே இல்லை.
அம்மா, அப்பாவோட கனவை அச்சீவ் பண்ண முடியவில்லை. நான் நிறைய கனவுகளோடு இருந்தேன், ஆனால், அதை நிரூபிக்க முடியவில்லை. இம்முறையும் தோல்வி அடைந்து விடுவேன் என்ற பயத்தில் தவறான முடிவை எடுக்கிறேன். அம்மா, அப்பா, அண்ணா சாரி...' என்று குறிப்பிட்டிருந்தார்.
வெற்றியானந்தத்தின் தற்கொலையும், அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதமும் பெற்றோரையும், உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.
அதே நாளில்தான் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகிலுள்ள எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோஷ்னி, நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.













