"அம்மா, அப்பா சாரி... தவறான முடிவை எடுக்கிறேன்" - நீட் தேர்வு பயத்தால் மாணவர் வி...
Balan Review: 'தாய் - மகனின் த்ரில்லர் போராட்டம்' - 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் படம் எப்படி?
`மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிதம்பரம் இயக்கத்தில் `ஆவேசம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜீத்து மாதவனின் எழுத்தில் உருவாகியிருக்கிறது பாலன்: தி பாய் திரைப்படம்.
சிறையிலிருந்து வெளியே வரும் தாய் ஒருவர் (ஃபர்ஸானா பலாத்திங்கல்), தன் மகனுடன் (அதிஷேஷன் கே.ஆர்.), தன் அடையாளத்தை மறைத்து, வெவ்வேறு இடங்களில் வேலைகளைச் செய்து வருகிறார். தன் சொந்த அடையாளத்தைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கும் இடங்களிலிருந்து உடனடியாக மகனுடன் வெளியேறிவிடுகிறார்.

இத்தகைய சூழலில் ஒரு இடத்தில் வேலைக்குச் சென்று அந்த இடத்தில் சில காலம் தங்க முடிவெடுக்கிறார். அந்த இடத்தில் நடக்கிற ஒரு சம்பவத்தால் தாய்யும், மகனும் பிரிகிறார்கள். ஏன் அடையாளத்தை அவர் மறைத்தார், அந்தச் சம்பவத்தின் பின் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது, தாய்யும் மகனும் சேர்ந்தார்களா என்பனதான் 'பாலன்: தி பாய்' படத்தின் கதை. இதை நல்ல மேக்கிங்கில், எமசோனல் த்ரில்லராக எடுத்திருக்கிறார் சிதம்பரம்.
பாலனாக நடித்துள்ள அதிஷேஷன், அம்மாவாக நடித்திருக்கும் ஃபர்ஸானா பலாத்திங்கல், பாட்டியாக வரும் டாலி ஜூன் இந்த மூன்று பேரின் நடிப்புதான் படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் ஆன்மாவாக இருக்கும் ஆதிஷேஷன், குழந்தைத்தனமும் அதே நேரம் சமயோஜிதமும் கலந்த ஒரு சிக்கலான கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக தன் வாழ்க்கையைப் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாகத் தெரியவரும் தருணங்களில் அவரது கண்களில் தெரியும் குழப்பம், ஏமாற்றம், கோபம், பள்ளிக்குச் சென்றபின் அவரிடம் தெரிகிற மாற்றம் எனச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வளர்ந்துவிட்ட பாலனாக நடித்திருக்கும் முகமது சினானும் தாயைத் தேடுகிற தவிப்பு, தனக்கு அடைக்கலம் குடுத்தவரிடம் ஏற்படும் அன்பு, காவல்துறை அதிகாரியான பவித்ரனிடம் ஆற்றாமையில் மன்றாடுவது என நன்றாக நடித்திருக்கிறார்.
அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபர்ஸானா பலாத்திங்கல் அத்தனை உணர்வுகளையும் தன் கண்களிலே கடத்திவிடுகிற ஆளுமைமிக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். சிறையிலிருக்கும் தன் மகனிடம் புதுப்புது கதைகளைச் சொல்வது, யாராவது தங்களைப் பற்றி விசாரித்தால் உடனடியாகச் சுதாரித்து அங்கிருந்து விலகுவது, தன் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையப் போராடுவது என அறிமுகப்படத்திலேயே சிக்சர் அடித்திருக்கிறார்.

தனது மகனைப் பாதுகாக்க எந்த அளவிற்கும் செல்லத் தயாராக இருக்கும் ஒரு தாயின் அன்பையும், அதே நேரத்தில் கடந்த காலத்தின் சுமையால் நொறுங்கும் ஒரு பெண்ணின் வேதனையையும் மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறார். பல காட்சிகளில் வசனங்களைவிட அவரது முகபாவனைகளே அதிகம் பேசுகின்றன.
காவல்துறை அதிகாரி பவித்ரனாக வரும் பால் லால், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடித்திருக்கிறார். பழிவாங்கும் எண்ணத்தில் ஊறிக்கிடக்கிற தனக்கு வேண்டியதைச் செய்ய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிற பாத்திரத்திற்குப் பொருந்திப்போகிறார். படத்தில் முக்கியமான தருணத்தில் தோன்றும் டொவினோ தாமஸ், குறைந்த நேரம் திரையில் தோன்றினாலும், தனது அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாக படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அற்புதமாகப் பதிவு செய்கிறது. கதாபாத்திரங்களின் தனிமை, அவர்களின் மனக்குழப்பம், நினைவுகளின் பாரம் ஆகியவற்றை காட்சிகளின் வழியே உணர்த்தியதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று. காட்சிகளுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளை வெளிக்கொணரும் பணியை அவரது இசை மிகச் சிறப்பாகச் செய்கிறது. படத்தின் பரபர மனநிலையையும், தேவையான காட்சிகளில் நிதானத்தையும் வழங்கியிருக்கிறார் விவேக் ஹர்ஷன்.
குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிகளில் இசையும் காட்சிகளும் இணையும் விதம் பார்வையாளர்களுக்கு நல்ல திரையனுபவத்தை வழங்குகிறது.

இரண்டாம் பாதியில் திரைக்கதை வேறொரு கதையை நோக்கி நகர அது பல கேள்விகளை எழுப்பி, படத்தின் ஓட்டத்திற்குத் தடையாக மாறிப்போகிறது. கிளைக்கதைகள் கதையை நகர்த்த உதவினாலும், அதுவரை படம் கடத்திச் செல்கிற உணர்வு நிலைக்கு மாறாக வேறொரு நிலைக்கு அது செல்ல, நமக்கு ஒருவித அயர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தன் அம்மாவைக் காண மகன் அத்தனை முயற்சிகளை எடுக்க, அம்மா அந்த முயற்சியை எடுத்தாரா, இத்தனை ஆண்டுகளாக யாரும் அவரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கவில்லையா எனச் சில கேள்விகளும் எழுகின்றன.
டெக்னிக்கலாகவும், நடிப்பாலும் கவனம் ஈரக்கிற பாலன் - தி பாய், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்திருக்கும்.


















