"அவர் பக்கத்திலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள்" - காதலன் இறந்ததால் பெண் எடுத்த...
அரசு இல்லத்திலிருந்து வாடகை வீட்டில் குடியேறிய பினராயி விஜயன்; எதிர்க்கட்சித் தலைவராக மறுப்பா?
கேரளம் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சி.பி.எம் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் 10 ஆண்டுகள் கேரளம் முதல்வராக இருந்த பினராயி விஜயன் வசித்து வந்த அரசு இல்லமான கிளிஃப் ஹவுஸை நேற்று காலி செய்தார்.
அரசு இல்லத்தில் இருந்த பொருட்கள் திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பில் உள்ள வாடகை வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த வாடகை வீட்டில் பினராயி விஜயன் நேற்று குடிபெயர்ந்தார். டெல்லியில் போலிட் பீரோ கூட்டத்திற்குப் பிறகு நேற்று இரவு ஏழரை மணியளவில் திருவனந்தபுரம் திரும்பிய பினராயி விஜயன் நேரடியாக வாடகை வீட்டிற்குத்தான் சென்றார்.
அவருடன் அவரது மனைவி கமலா, சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் ஆகியோரும் இருந்தனர். மகள் வீணா விஜயன், மருமகன் முகமது ரியாஸ், முன்னாள் அமைச்சர் வி. சிவன்குட்டி, சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஏ.ஏ. ரஷீத் ஆகியோர் பினராயி விஜயனை வரவேற்றனர்.
வீட்டின் பாதுகாப்பிற்காகத் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பேக்கரி சந்திப்பில் ரிசர்வ் வங்கிக்குப் பின்புறம் உள்ள நிம்ஸ் மைக்ரோ மருத்துவமனை வளாகத்தில்தான் இந்த வாடகை வீடு உள்ளது.
அது நிம்ஸ் மைக்ரோ மருத்துவமனைக்குச் சொந்தமான வீடாகும். வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்கள் சேர்த்து மொத்தம் 4500 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும்.

முதல்வர் பதவியிலிருந்து விலகிய பினராயி விஜயன் தங்குவதற்காக சி.பி.எம் மாநிலத் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி சென்டர் அருகே உள்ள சிந்தா பப்ளிகேஷன் கட்டிடத்தில் இரண்டு பிளாட்டுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால், செல்லப்பிராணிகளைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்ப்பதற்கு ஏதுவாக வீட்டைச் சுற்றி இடவசதிகொண்ட வாடகை வீட்டைத் தேர்ந்தெடுத்துள்ளார் பினராயி விஜயன்.
குறவன்கோணம் உட்பட பல இடங்களில் வாடகை வீடு பார்த்த போதிலும், வசதிகள் இல்லாத காரணத்தால் அவை தவிர்க்கப்பட்டன. அவரது மகள் வீணா விஜயன் இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தார்.
பினராயி விஜயன் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டே இந்த வீடு தேர்வுசெய்யப்பட்டததாகச் சொல்கிறார்கள்.
பினராயி விஜயனுக்கு மிகவும் பிடித்தமான லாப்ரடோர் இனத்தைச் சேர்ந்த செல்ல நாய் 'ராபி' இந்த வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. கிளிஃப் ஹவுஸில் இருந்த வெச்சூர் இன பசு உள்ளிட்டவையும் இங்குக் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரை முடிவு செய்யும் விதமாக சி.பி.எம் மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டோன்மென்ட் ஹவுஸ் அரசு இல்லம் வழங்கப்படும். பினராயி விஜயன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது.
இந்த நிலையில் பினராயி விஜயன் வாடகை வீட்டில் குடிபெயர்ந்ததால் அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகும் மனநிலையில் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நிதி அமைச்சர் கே.என் பாலகோபால் எதிர்க்கட்சித் தலைவர் ஆக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.













