`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வ...
`இன்னைக்கு நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்கதான்!' - உருகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்
``பொம்பளைப் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊத்திக் கொன்னு போடற காலத்துல உசிலம்பட்டியில பொறந்தவங்க சார் என் அம்மா. ஆனா என் தாத்தா பிரிட்டிஷ்காரங்க காலத்துலயே ஹெட் மாஸ்டரா இருந்ததால அம்மாவும் படிச்சு டீச்சர் ஆகிட்டாங்க.
கல்யாணம்ன்னு வந்த போது, வாத்தியார் வேலை பார்த்த அப்பா கிடைச்சார் எங்களுக்கு. அதனாலேயே தன்னுடைய ரெண்டு மகள்களையும் டீச்சர் ஆக்கிட்டாங்க எங்க அம்மா. நான் மட்டும்தான் வழி தவறி நடிக்க வந்துட்டேன். அதுல அம்மாவுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தம். ஆனாலும் பிறகு, 'நாங்களாவது பள்ளிக் கூடத்துல மட்டும்தான் வாத்தியாரா இருந்தோம். நீ காலேஜ் வாத்தியாராக் கூடப் போகலாம்ல' எனக் கேட்டுச் சமாதானம் ஆகிட்டாங்க.
எங்க அப்பாவுக்கும் என்னை வாத்தியாராக்கிப் பார்க்கத்தான் ஆசை. அது நடக்கலை. என் முதல் சீரியல்ல வாத்தியார் கேரக்டர் கிடைச்சப்ப அதைப் பார்க்க அவருமே இல்லை. அவர் இறந்த பிறகே நான் நடிக்க வந்தேன்."
- சில தினங்களுக்கு முன் மறைந்த தன் அம்மா சகுந்தலாவை நினைவு கூர்ந்தபடி பேசத் தொடங்கினார் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்.

''அம்மா குடும்பம் பெரிய குடும்பம். அம்மாவையும் சேர்த்து தாத்தாவுக்கு 4 பெண்கள், 3 ஆண்கள்னு மொத்தம் 7 பசங்க. அம்மாவுடைய பெரிய அக்காவுடைய கணவர், அதாவது என் பெரியப்பா முத்துக் கருப்பத் தேவர் யாருன்னா, குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தது இல்லையா, அந்தப் போராட்டத்தின் நினைவா தூண் அமைக்கப்பட்டிருக்கே... அந்த தூணை நிறுவியவர். பெரியப்பா குடும்பத்துலயும் 7 பசங்க.
அதேபோல மத்த பெரியம்மா, சித்தி, மாமன்கள்னு எல்லாமே எங்க அம்மா தேனிப் பக்கம் வந்ததும், அவங்க பின்னாடியே இந்தப் பகுதிக்கு குடி வந்துட்டாங்க.
கூடப் பிறந்தவங்க கூட அவ்வளவு பாசமா அம்மா இருந்ததாலேயே இன்னைக்கும் சித்தப்பா, பெரியப்பா மக்கன்னு நாங்க எல்லாருமே அதே ஒற்றுமையோட இருக்கோம். ஒரே வீட்டுலதான் இல்லையே தவிர எல்லாரும் கூப்பிடற தூரத்துலதான் இருக்கோம். நல்லது பொல்லதுனு கூடினா ஒரு ஊர் அளவுக்கு சேர்ந்துடும் எங்க குடும்பம்.
எதுக்கு இதைச் சொல்றேன்னா, அம்மா அந்த மாதிரி எங்களை வளர்த்து விட்டுட்டுப் போயிருக்காங்க. இறக்கிர அனைக்குக் கூட என் பெரியம்மா மக, அக்கா மரகதம் வீட்டுலதான் இருந்தாங்க.
இன்னொரு விஷயம் அவங்க படிச்சவங்களா இருந்தால, சுத்தி இருக்கற எல்லாரையும் நல்லா படிச்சு நல்ல வேலையில இருக்கிற மாதிரி பண்ணிட்டாங்க. அங்காளி பங்காளிங்க முக்கால்வாசிப் பேர் இன்னைக்கு அரசு வேலையில் இருக்காங்க. சிலர் வக்கீலா கூட இருக்காங்க.

முக்கியமான விஷயமா இதைச் சொல்றதுனால ஒண்ணும் ஆகிடப் போறதில்லைனு நினைக்கேன், அதே பழைய ஒற்றுமையோடவே இன்னைக்கும் நாங்க இருக்கோம். அதுக்கு முக்கியக் காரணம் அம்மாதான்' என்றவர்,
``நான் எப்படி பெரியப்பா சித்தப்பா பசங்க கூட ஒட்டும் உறவுமா இருக்கேனோ, அதே போலவே என் மனைவி மகன்களும் இப்ப இருக்காங்க. இது இப்படியே தொடரணும்கிறதுதான் என்னுடைய ஆசை மட்டுமல்ல, எங்க மொத்த குடும்பத்தினரின் ஆசையும் கூட'' என்கிறார் ஸ்டாலின்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மொத்த குடும்பத்தினரையும் அரவணைத்துச் செல்கிற கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் ஸ்டாலின். அவரது நிஜ வாழ்க்கையும் அதேபோல அமைந்திருக்கிறது என்பதுதான் இங்கே ஹைலைட்!


















