'ஆட்சியில் பங்கு டு வாரியங்கள்.!' - தலைமைக்கு தமிழக காங். நிர்வாகிகள் அனுப்பிய க...
`இரவினில் ஆட்டம்; பகலில் தூக்கம்; இதுதான் துணை முதல்வர் உலகம்" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் அதிமுக, பாஜக-வுக்கு அடிமை என்றும், அதிமுக பாஜக-வின் கிளை அமைப்பு என்றும் அவதூறுகளைப் பரப்பி வருகிறார். அதிமுக சொந்தக்காலில் நிற்கும் கட்சி. உழைப்பாளிகள், இளைஞர்கள் நிறைந்த கட்சி. அதிமுக யாருக்கும் அடிமை இல்லை.
ஆனால், திமுக-தான் காங்கிரஸுக்கு அடிமையான கட்சி. காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது, அறிவாலயத்தின் முதல் மாடியில் ரெய்டும், தரைத் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இதுதான் அடிமைத்தனம். தமிழக வரலாற்றிலே பொய் பேசி விளம்பரத்தை நம்பி ஆட்சி நடத்தும் முதல்வர் உண்டு என்றால், அது ஸ்டாலின் தான். தினம் ஒரு பெயர், போட்டோஷூட் நடத்துகிறார். ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் எங்கள் ஆட்சியில் நடைபெற்ற தவறை சுட்டிக்காட்டுங்கள், பதில் சொல்கிறோம். அதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், பாஜகவுக்கு அடிமை, ஊர்ந்து போய் பதவி வாங்கினார் என்று பேசுவதைத் தவிர்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது.
சட்டையைக் கிழித்துக்கொண்டு போனார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது முதல்வர் ஸ்டாலின் என்னவெல்லாம் நாடகம் நடத்தினார். அதிமுக மீதான பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சட்டையைக் கிழித்துக்கொண்டு போனார். கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியைக் கொடுக்கவில்லை.அவர் தந்தையே அவரை நம்பி பதவி கொடுக்கவில்லை. ஸ்டாலினும், நீங்களும் ஒரே மேடையில் விவாதத்திற்கு முன்வருவீர்களா?என்று கேட்டார்கள். நான் தயார் என்று சொன்னேன், நான் வருகிறேன், அதிமுக ஆட்சியின் சாதனைகளைச் சொல்கிறேன். நீங்களும் சொல்லுங்கள் என்றேன். இதுவரை பதிலே இல்லை.
இபிஎஸ் கடையை திறந்து வைத்து கூவி அழைக்கிறார் யாரும் வரவில்லை என்று இரண்டு மாதத்திற்கு முன்பு ஸ்டாலின் சொன்னார். கூட்டணி தானாக அமைய வேண்டும். கனி தானாக பழுக்க வேண்டும். அப்போதுதான் சுவை. இப்போது தே.ஜ.கூட்டணி அமைத்துவிட்டது. வலிமையான கூட்டணி. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது.

தினமும் திமுக காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி இருக்குமா? என்பது சந்தேகம். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். இப்போது கூட உரிய மரியாதை கிடைக்காவிட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்.பி சொல்கிறார். கூட்டணி நிலைக்குமா தெரியவில்லை. இன்னொரு பக்கம் திருமா ஆட்சியில் பங்கு கேட்கிறார். கூட்டணியில் குழப்பம்.
துணை முதல்வர் உதயநிதி அவ்வப்போது அதிமுக பற்றி அவதூறு பரப்புகிறார். இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம் இதுதான் துணை முதல்வர் உலகம். பகலில் நாட்டு மக்களை பார்க்காதவர், இன்ஸ்டாவில் நள்ளிரவில் லைக் போடுகிறார். இப்படிப்பட்ட துணை முதல்வர் தேவையா?
ஸ்டாலினின் 5 ஆண்டு சாதனை 1000 ஆண்டு வரலாறு பேசும் என்கிறார். 5 ஆண்டு ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை கடனாளியாக்கிவிட்டார் என்பதைத்தான் மக்கள் பேசுவார்கள். அந்த கடனை நாம் தான் கட்டணும். வரி போட்டுத் தான் அடைக்கணும். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.
2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய், ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகால கடன் சுமை அதிகம், 5 லட்சம் கோடி. இதைத்தான் பேசுவார்கள். அதிமுக ஆட்சியில் ஊழல் என்கிறார். உங்கள் ஆட்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்னொன்று டிரான்ஸ்பாரம் ஊழல், செந்தில் பாலாஜி, ஊழல். டிரான்ஸ்பார்ம்க்கு 32 டெண்டர் ஒரே ரேட் போட்டனர். இந்தியாவில் எங்கும் இப்படி நடந்ததில்லை. இதுவும் நீதிமன்றத்தில் இருக்கிறது, தேர்தல் நேரத்தில் எங்கு இருக்க வேண்டுமோ, அங்க இருப்பார்கள். யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது" என்றார்.



















