Weekly Horoscope: வார ராசி பலன் 1.3.26 முதல் 7.3.26 | Indha Vaara Rasi Palan | B...
ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.
இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்துவந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
காமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.














