செய்திகள் :

உதயநிதியின் பாராட்டு; கிருஷ்ணசாமியின் விமர்சனம்; கடந்து செல்லச் சொல்லும் திருமாவளவன்

post image

வி.சி.க தலைவர் திருமாவளவனையும், அமைச்சர் வன்னி அரசுவையும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்ததுடன் "இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று, வன்னி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்' என்று அறிவித்தார்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம் (ஃபைல் போட்டோ)
இமானுவேல் சேகரன் நினைவு தினம் (ஃபைல் போட்டோ)

அதனைத் தொடர்ந்து வி.சி.க ஆதரவாளர்களும், புதிய தமிழகம் கட்சி ஆதரவாளர்களும் சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் மாறி மாறி விமர்சித்து வருவது கருத்து மோதல் என்பதைக் கடந்து சமூக ரீதியான விமர்சனமாக மாறி சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 30 ஆம் தேதி மதுரை வந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, "பட்டியல் சமுதாயங்களின் நலனுக்கான துறையின் பெயர் ஆதி திராவிடர் நலத்துறை என ஒரு சமுதாயத்தின் பெயரில் இருக்கிறது. பட்டியலில் உள்ள 76 சமுதாயங்களின் நலனுக்கான அத்துறைக்குப் பொதுவான பெயர் வைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக நாங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது த.வெ.க அரசு சமூக நீதித்துறை என்று மாற்றியதை வரவேற்றோம்.

மதுரை செய்தியாளர் சந்திப்பில்
மதுரை செய்தியாளர் சந்திப்பில்

ஆனால், சமூகநீதித்துறைக்கு வன்னி அரசு அமைச்சராகப் பதவியேற்றபோது அமைதியாக இருந்த திருமாவளவனும், ரவிக்குமாரும் ஒரு மாதம் கழித்து ஆதி திராவிடர் நலத்துறை என்றே இருக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்துள்ளார்கள்.

அமைச்சர் வன்னி அரசும், சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்போது ஆதி திராவிடர் என்றே தொடர்ந்து குறிப்பிட்டார், இது பட்டியலில் உள்ள 76 சமுதாயங்களை அவமதிப்பது போலுள்ளது.

பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திர குலத்தான், கடையன், வாதிரியான் என 7 பெயர்களில் அழைக்கப்பட்ட எங்கள் சமுதாயத்தினரை நூறாண்டு காலம் போராடி, மத்திய அரசை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் மாற்றியுள்ளோம்.

இந்தப் பெயர் மாற்றத்துக்காக எவ்வளவு காலம் கஷ்டப்பட்டோம், எத்தனை போராட்டங்கள், மாநாடுகளை நடத்தினோம்.

பெயர் மாற்றத்துடன் எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேற்றி எம்.பி.சி பட்டியல் சேர்த்து 7 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், இதையெல்லாம் மறைத்து எல்லோரையும் ஆதி திராவிடருக்குள் அடைக்க பார்க்கும் வன்னி அரசைக் கண்டிக்கும் வகையில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வரும் மக்கள் கண்டன வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன் வருவார்கள். த.வெ.க அரசு தன் கொள்கையில் உறுதியாக இருக்கவும் வலியுறுத்துவார்கள்" என்று தெரிவித்தார்.

உதயநிதி
உதயநிதி

அதோடு, "நீதிக்கட்சி, திராவிடர் கழகத் தலைவர்களைக் குறிப்பிடாமல், பெரியார், அண்ணா, கலைஞரை மறந்துவிட்டு திருமாவளவனை கொள்கைத் தலைவர் என்று உதயநிதி கூறியது அவரின் பலவீனத்தைக் காட்டுகிறது. பச்சோந்திகள்தான் கொள்கைத் தலைவரா? பெரியார், அண்ணா, கலைஞரும் திருமாவளவனும் ஒன்றா?" என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதைத்தொடர்ந்துதான் வி.சி.க ஆதரவாளர்கள் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கடுமையாக விமர்சிக்க, பதிலுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவாளர்கள் திருமாவளவனை விமர்சிக்க என்று தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது.

பாவலன்
பாவலன்

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாவலனிடம் கேட்டதற்கு, "எங்கள் தலைவர் இது குறித்து எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று கூறிவிட்டார். அரசியல் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமி, உழைக்கின்ற மக்களிடம் சாதியைச் சொல்லி நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படுகிறார்.

சொந்த சமூகத்தினருக்கு எந்த நன்மையும் செய்யாமல் தன் சுயநலனுக்காக கொள்கை மாறிவிட்டார். அதோடு, பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் களத்தில் இறங்கிப் போராடும் விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுயலாப அரசியலுக்காக விடுதலைச் சிறுத்தைகளையும் திருமாவளவனையும் மக்களுக்கு எதிராக முன் நிறுத்த நினைப்பது அவருக்கே எதிராகத்தான் முடியும்.

கொள்கை தடம் புரண்டுள்ள கிருஷ்ணசாமி, தன் இருப்பைக் காட்டுவதற்காக இதுபோன்று பேசி வருகிறார். வேறொரு நாளில் போராட்டம் நடத்த வேண்டியதுதானே, தன்னை நம்பி மக்கள் வர மாட்டார்கள் என்பதால்தான் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வரும் மக்களைத் தன் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்" என்றார்.

இதற்கிடையே வி.சி.க தலைவர் திருமாவளவன் வெளியிட்ட வீடியோ பதிவில், ''தி.மு.க-வுக்கும், வி.சி.க-வுக்கும் உள்ள உறவு தேர்தலை முன் வைத்து அல்ல என்ற அடிப்படையில்தான் சில அரசியல் காரணங்களுக்காக கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்பும், என்னை கொள்கை ஆசான் என்று உதயநிதி கூறியுள்ளார். அதை அன்று சட்டசபையிலிருந்த தி.மு.க நிர்வாகிகள் கை தட்டி ஆமோதித்துள்ளனர். இது நம் இயக்கத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில் இதைச் சிலர் விமர்த்து வருகிறார்கள்.

திருமாவளவன் - கிருஷ்ணசாமி
திருமாவளவன் - கிருஷ்ணசாமி

குறிப்பாக அண்ணன் கிருஷ்ணசாமி, பெரியார், அண்ணாவை விட திருமாவளவன் உயர்ந்தவரா? என்று விமர்சித்துள்ளார். இதற்கு நம் கட்சியினர் எதிர்வினை ஆற்றியுள்ளதைப் பார்த்தேன், கிருஷ்ணசாமிக்கு இனி யாரும் எதிர்வினை ஆற்ற வேண்டாம், கடந்து செல்லுங்கள்" என்று கூறியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பட்டியல் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரிடம் பேசியபோது, "ஆரம்பக் காலத்தில் பட்டியல் சமூக மக்களின் உரிமைக்காக இணைந்து குரல் கொடுத்த கிருஷ்ணசாமியும், திருமாவளவனும், கால ஓட்டத்தில் இரண்டு துருவங்களாக மாறிப்போனது மட்டுமின்றி, தற்போது ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது வருத்தமான விஷயம்தான்.

அதை உணராமல் இரண்டு கட்சி ஆதரவாளர்களும் சமூக ஊடகத்தில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சரியல்ல. இரண்டு கட்சியினருக்கு இடையேயான கருத்து மோதல், இரண்டு சமூகங்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விடும் அபாயமுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடும் போலீஸ் உயர் அதிகாரிகள்
பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடும் போலீஸ் உயர் அதிகாரிகள்

அடுத்ததாக, தேவேந்திர குல வேளாளர் மக்களால் கடவுளாக வணங்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அமைதியான முறையில் நடத்த தென் மண்டலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் பரமக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டதுடன் அரசு சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அப்படி அனைத்துக் கட்சியினரும் வருகை தந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற அஞ்சலி நிகழ்ச்சியைப் போராட்டக் களமாக மாற்ற வேண்டாம் என்பதுதான் அனைவரின் எண்ணம். ஏனென்றால், 2011-ல் அஞ்சலி செலுத்த பரமக்குடிக்கு வரும் வழியில் தமிழக முன்னேற்றக்கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்ட தகவல் பரவி பரமக்குடியில் சாதாரணமாகத் தொடங்கிய மறியல் போராட்டம், பின்பு கலவரமாக மாறி போலீசாரின் துப்பாக்கிச்சூட்டால் 7 பேர் கொல்லப்பட்டும், தாக்குதலில் பலர் காயம்பட்டும் துயர சம்பவமாக முடிந்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

அதனால் அரசியல் ரீதியான எதிர்ப்பை மற்றொரு நாளில் நடத்தட்டும், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றனர்.

இந்த முறை த.வெ.க அரசிலுள்ள முக்கிய அமைச்சர்கள் வருகை தரவுள்ளதால், எந்தவொரு சலசலப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி அன்பு தலைமையில் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் பாதுகாப்பு எற்பாடுகளைக் கண்கானித்து வருகிறார்கள்.

"மகள் மூலம் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றார்" - பினராயி விஜயன் மீது வழக்குப் பதிய டிஜிபி-க்கு ED கடிதம்

கேரள மாநிலம் ​கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனம், தங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜ... மேலும் பார்க்க

"நீட் ஆட்கொல்லி தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?" - உதயநிதி காட்டம்

“நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி... மேலும் பார்க்க

"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" - ஈரான் அதிபர் அதிரடி

அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே நல்ல பணக்கார மற்றும் வலுவான ந... மேலும் பார்க்க

`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' - தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

'கல்யாண வீடு, கோவில் திருவிழாலாம்போகணும்; MLA சம்பளத்தை உயர்த்தி கொடுங்க!' - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வுகள் இன்று நடந்திருந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 'எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்வு வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார். எ... மேலும் பார்க்க

'இளைய தளபதி க்ரூப்ஸ்' - ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? - அமைச்சர் சரத் முழு விளக்கம்!

பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இதில் பேசிய அமைச்சர் சரத் 'நாங்களெல்லாம் சாதாரணமாக வரவில்லை...' தான் ரசிகர் மன்றம் வளர்த்த கதையை எமோஷனலாக பேசியிருந்தார்.அமைச்... மேலும் பார்க்க