மதுராந்தகம், தாராபுரம் - இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?!
`சாலை ஆக்கிரமிப்பு வாகனங்ள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்..!’ - புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிரடி
புதுச்சேரியின் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு வீதிகளிலும் பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற வாகனங்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிவிப்பில், `புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் கைவிடப்பட்ட கனரக, இலகுரக, இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள், ஜெனரேட்டர்கள் போன்றவை பொது சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஒழுங்குக்கு இடையூறாக உள்ளன.

அதனால் குப்பைத் தேக்கம், கொசு உற்பத்தி, தொற்று நோய்கள் பரவல் அபாயம் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. எனவே, இத்தகைய வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஒரு வார காலத்திற்குள் அகற்றிக்கொள்ளுமாறு தினசரி நாளிதழ் மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது வாகனங்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக அகற்றி, தங்களது சொந்த இடங்களில் பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அந்தக் காலக்கெடுவுக்குள் அகற்றப்படாத வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், புதுச்சேரி நகராட்சி சட்டம், 1973-ன் விதிகளின்படி, போக்குவரத்துக் காவல்துறையின் உதவியுடன் எந்தவித முன்னறிவிப்புமின்றி அப்புறப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு நோட்டீஸ்கள் உழவர்கரை நகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களில் ஒட்டப்பட்டது. ஆனாலும், பல இடங்களில் அவை அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் பொதுமக்கள், மாணவர்களின் போக்குவரத்து மற்றும் சுகாதார நலம் கருதி கைவிடப்பட்ட ஒன்பது வாகனங்கள் உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அவர்களின் நேரடி மேற்பார்வையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், உழவர்கரை துணை வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வாகன உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. அதனால் இனி எந்த கால அவகாசமும் கொடுக்க முடியாது. அவர்கள் உரிய அபராதத்தை செலுத்திவிட்டு, இனி வாகனத்தை சாலையில் நிறுத்தமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வாகனத்தை மீட்டுச் செல்ல வேண்டும். அது தவறும் பட்சத்தில் விதிகளின்படி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.














