``ஒவ்வொரு முறையும் ஜாமீன் வழங்க முடியாது" - உமர் காலித் மனுவை மீண்டும் நிராகரித்...
``ஒவ்வொரு முறையும் ஜாமீன் வழங்க முடியாது" - உமர் காலித் மனுவை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!
டெல்லி கலவர வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உமர் காலித் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனது மறைந்த மாமாவின் 40வது நாள் சடங்கில் பங்கேற்கவும், அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கும் தனது தாயாரைக் கவனித்துக் கொள்ளவும் 15 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று காலித் தனது மனுவில் கோரியிருந்தார்.
உமர் காலித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'காலித்தின் குடும்பத்தில் அவரது தந்தை, தாய் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். காலித்தின் தந்தைக்கு 71 வயதாகிவிட்டதால், அவரால் காலித்தின் தாயை கவனித்துக் கொள்ளும் சூழல் இல்லை. எனவே காலித்தின் இருப்பு குடும்பத்திற்கு அவசியம்' என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த ஜாமீன் மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சமீர் பாஜ்பாய், `இதற்கு முன்னர் உமர் காலித் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றக் குற்றவாளிகளுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவர்கள் நீதிமன்ற நிபந்தனைகளை மிகச் சரியாகப் பின்பற்றினர். ஆனால், அதைக் காரணம்காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கேட்கும் போதெல்லாம் நீதிமன்றம் அதை வழங்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
ஒவ்வொரு புதிய ஜாமீன் மனுவையும் அதன் தகுதியின் அடிப்படையிலேயே நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அதற்கான காரணங்கள் நியாயமானதாக இருக்கும்போது மட்டுமே ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும். மாமாவின் மரணச் சடங்கில் பங்கேற்பது என்பது அத்தியாவசியமானது அல்ல. ஒருவேளை அந்தச் சடங்கு விண்ணப்பதாரருடன் நெருங்கிய ரத்தத் தொடர்பு கொண்ட ஒருவருடையதாக இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். மேலும், அந்த உறவு அவ்வளவு நெருக்கமானதாக இருந்திருந்தால், மாமா இறந்த சமயத்திலேயே விண்ணப்பதாரர் ஜாமீன் கோரியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, இவ்வளவு நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்போது ஜாமீன் கேட்பது நியாயமானதாகத் தெரியவில்லை. விண்ணப்பதாரரே தனக்கு ஐந்து சகோதரிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். அவர்கள் அருகில் வசிக்கவில்லை என்றாலும், தாயாரின் உதவிக்கு அவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரரின் தந்தையும் அங்குதான் இருக்கிறார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியபடி, இந்த அறுவை சிகிச்சை என்பது கட்டிகளை அகற்றுவதற்கான ஒரு எளிய சிகிச்சை முறை மட்டுமே. எனவே, இதற்கு விண்ணப்பதாரரின் நேரடி உதவி எதுவும் தேவைப்படுவதாகத் தெரியவில்லை" என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.
சில தினங்களுக்கு முன்புதான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உமர் காலித் உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுக்கப்படுவது குறித்து விமர்சித்திருந்த நிலையில், மீண்டும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பது விவாதமாகியிருக்கிறது.














