அடுத்து வரப்போகும் மிகப்பெரிய IPO இதுதான்! | Galgotias university | IPS Finance ...
காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!
மகாபாரதத்தோடு தொடர்புடைய பல ஆன்மிகத் தலங்கள் நம் தேசத்தில் உள்ளன. அதிலும் தமிழகத்தில் பல்வேறு தலங்கள் மகாபாரதக் கதாமாந்தர்களின் பெயரோடே திகழ்கின்றன. அப்படிப்பட்ட தலங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. இதிகாச காலத்தில் சஞ்சரிக்கும் உணர்வைத் தருவதோடு வேண்டும் வரங்களையும் நமக்கு அருள்பவை. அப்படிப்பட்ட ஒரு தலம் தான் காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டத்தில் உள்ள சின்ன வெண்மணியில் இருக்கும் பீமேஸ்வரர் ஆலயம். வாருங்கள், அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம்.
இங்குள்ள சிவாலயம் பீமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்கிறார்கள். இந்த ஊரைச் சுற்றி பஞ்சபாண்டவர்களும் குந்தி தேவியும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவாலயங்கள் உள்ளன என்றாலும் பீமன் வழிபட்ட ஆலயம் மட்டுமே தற்போது முறையான வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள். பிற கால வெள்ளத்தில் சிதைந்துள்ளன என்கிறார்கள்.

பஞ்சபாண்டவர்களில் பீமன் மாபெரும் சிவபக்தன். திரேதா யுகத்தில் கும்பகர்ணனின் மகனாகப் பிறந்திருந்தான் பீமன். யுத்தத்தில் கும்பகர்ணனும் ராவணனும் கொல்லப்பட்டதும், சிவனாரிடம் வெறுப்புற்று அவரை நிந்தனை செய்தான். அதனால் உண்டான பாவத்தைப் போக்கும் விதமாக, துவாபரயுகத்தில் பாண்டவர்களில் ஒருவனாகப் பிறந்து சிவபக்தியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் பீமன் என்பார்கள். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான், பீமேஸ்வரர் திருக்கோயில்.
கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி சந்நிதி கொண்டு அருள்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷம். இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே வழிபடும்போது நேர்மறை அதிர்வுகள் நமக்குள் எழுவதைக் கொண்டு நம்மாலும் உணர முடியும்.
பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒரு சிறு மண்டபத்தில் நவகிரகங்கள் வித்தியாசமாகக் காட்சி தருகின்றனர். சூரியன் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, குரு, ராகு தெற்கிலும்; சுக்கிரனும் புதனும் மேற்கிலும்; சந்திரன், சனீஸ்வரர் கிழக்கிலும்; செவ்வாயும் கேதுவும் வடக்கிலும் இருக்கும்படி நவகிரக சந்நிதி வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு.

கருவறை மண்டப விதானத்தில் மீன் சின்னங்களும், சூரியனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாளின் சந்நிதியிலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னம் காணப்படுகிறது. இத்தலம் ராகு - கேது தோஷம் தீர்க்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும். மேலும், கிரகண காலத்தில் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் தலமாகவும் விளங்குகிறது என்பதையே மேலே குறிப்பிட்ட சின்னங்கள் விளக்குகின்றன.
பொதுவாக பீமன் வழிபட்ட ஈசனை வணங்கினால் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. பீமன் சிவ வழிபாடு செய்துதான் பெரும் பலம் பெற்றான் என்பார்கள். அப்படிப்பட்ட பீமன் வழிபாடு செய்த ஈசனை வணங்கும்போது நோய்நொடிகள் நீங்கி உடலில் ஆரோக்கியம் மேம்படும். வாழ்விலும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.
பீமேஸ்வரர் ஆலயத்தின் தெற்கில் ‘பீம தீர்த்தம்’ அமைந்துள்ளது. பீமன் உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடி தினமும் ஈசனுக்கு பீமன் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது. மூர்த்தியைப் போலவே இந்தத் தலத்தின் தீர்த்தமும் நோய் தீர்க்கும் சிறப்பினை உடையது என்கிறார்கள்.
பிரதோஷ நாள்களில் சுவாமிக்கும், பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், கல்யாணத் தடை நீங்கி, சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும். இருவரும் நம் கடன் தொல்லைகளைப் போக்கி, அனைத்து செல்வங்களையும் அருள்வார்கள் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலுக்குப் பிற்காலப் பாண்டிய மன்னர்களால் திருப் பணிகள் செய்ததால் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இந்த ஆலயம் சிதிலம் அடைய ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் பல வருட முயற்சிகளுக்குப் பிறகே கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வருடம்தோறும் புரட்டாசி பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள்கள் பின் இரண்டு நாள்கள், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு முன் இரண்டு நாள்கள், பின் இரண்டு நாள்கள் காலை 6.20 முதல் 6.40 மணிவரை, இறைவனைத் தன் ஒளியால் ஸ்பரிசித்து வழிபடுகிறார் சூரியன்.
இப்படிப்பட்ட இதிகாச புராணச் சிறப்புகளை உடைய சிவாலயத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அருகிலேயே இருக்கும் பிற பாண்டவர்கள் வழிபட்ட லிங்கங்களையும் சென்று தரிசியுங்கள். நம் முன்வினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பெரும் செல்வமும் பேரானந்தமும் கிடைக்கும்.





















