செய்திகள் :

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி: மங்கலம் அருளும் மாசி மயானக் கொள்ளை தலம்!

post image

மகாசிவராத்திரியை அடுத்துவரும் அமாவாசை நாளில் நடைபெறும் வைபவம் மயானக்கொள்ளை. தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் அம்மன் ஆங்காரியாக எழுந்தருளி தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் உற்சவம்.

இந்தத் திருவிழாவைத் தரிசித்தாலே நம் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி இன்பமும் நன்மையும் மேலோங்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட மகிமைவாய்ந்த இந்த உற்சவத்தினை அது தொடங்கிய ஆதித் தலத்திலேயே வழிபடுவது மிகவும் விசேஷம். வாருங்கள் அந்தத் தலம் குறித்து அறிந்துகொள்வோம்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருமேனி புற்றுமண்ணால் சுயம்புவாக உருவானது.

நான்கு திருக்கரங்களுடன், இடக் காலை மடித்து, வலக் காலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி அருள்காட்சி தருகிறாள் அம்பிகை.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி

அம்மனுக்கு அருகிலேயே மிகப் பெரிய புற்றும் காணப்படுகிறது. புற்று வடிவில் தோன்றியதால், அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயர். தண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் உண்டு.

கோயிலுக்குத் தெற்கே பெரிய உருவமாக ‘பெரியாயி’ மல்லாந்து படுத்த நிலையில் அருள்கிறாள். பெரியாயியை வழிபடும் பக்தர்களைத் தீய சக்திகள் அண்டாது. கோயிலுக்குள் இருக்கும் இரட்டை விநாயகர்கள் மற்றும் இந்த 108 விநாயகர்களைத் தரிசித்தால் வாழ்வில் நன்மை உண்டாகும். இந்தக் கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது.

பிரம்மனின் தலையைக் கொய்ததால் சிவனாருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு, அவருடைய கையில் ஒட்டியிருந்த கபாலத்தை அங்காளம்மன் அழித்தது இந்தச் சுடுகாட்டில்தான் என்கிறது தலபுராணம்.

கபாலத்தை அழித்த பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லையாம். அவளது கோபத்தைத் தணிக்க தேர்த்திருவிழா நடத்தப்பட்டது. அந்தத் தேருக்கு தேவர்களும் முனிவர்களும் சக்கரமாகவும், அச்சாணியாகவும் மாறினார்களாம்.

அங்காள பரமேஸ்வரி அந்தத் தேரில் ஏறி வலம் வந்து சினம் தணிந்தாள். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும் முனிவர்களும் தேரை விட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்தனர்.

இந்த ஐதிகத்தின்படி, ஒவ்வொரு வருடமும் தேரோட்டம் முடிந்ததும் அந்தத் தேரைப் பிரித்துவிடுகிறார்கள். இறந்த ஆன்மாக்களுக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் உணவளிக்கும் விழா இது என்றும் சொல்லப்படுகிறது.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

மாசி மாதம் அமாவாசையன்று மேல்மலையனூர் மயானத்தில் நடைபெறும் ‘மயானக் கொள்ளை’ திருவிழா பிரசித்திபெற்றது. அம்மன் அருளால் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், நன்றிக்கடனாக காய்- கனிகள், கீரைகள் எனப் பலவைப் பொருள்களை வீசியெறிந்து சூறையிடுவார்கள்.

இந்த வைபவத்துக்கு வரும் பக்தர்கள், மயானச் சாம்பலை எடுத்துச் சென்று, தமது வீடுகளில் ஒரு துணிமுடிச்சில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதனால் தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. மாசித் திருவிழாவின்போது நள்ளிரவு நேரத்தில் சாமியாடிகள் சொல்லும் அருள்வாக்கு அப்படியே பலிக்குமாம்.

இந்தக் கோயிலில், பூஜை நடைபெறும்போது புற்று மண்ணைத் தண்ணீரில் கலந்து பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும், நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை.

தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்கள் மேல்மலையனூர் கோயிலுக்குச் சென்று, அங்கு நடைபெறும் ‘ஊஞ்சல் உற்சவம்’ விழாவைத் தரிசித்தால் குழந்தைப் பேறு, திருமணப் பேறு உள்ளிட்ட அனைத்து விதமான பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

அமாவாசை தினத்தில் நாள் முழுவதும் கோயில் திறந்தே இருக்கும். மனபயம் உடையவர்கள் எதிரிகளால் தொல்லைக்குள்ளானவர்கள் ஆகியோருக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது மேல்மலையனூர்.

ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி தேர்த் திருவிழா ஆகியவை மேல்மலையனூரில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களாகும். இந்தத் திருவிழா காலங்களில் அம்மனைத் தரிசித்தால் ராகு - கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில்

அங்காள பரமேஸ்வரிக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வழிபட்டால், அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினால் கணவனைப் பிரிந்திருக்கும் மனைவி, கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள் ஆகியோரின் பிரச்னைகள் நீங்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

சித்தம் கலங்கியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மலையனூருக்கு அழைத்துச் சென்றால், விரைவில் அவர்களின் மனநோய் குணமாகும் என்கிறார்கள், பக்தர்கள்.

பிரம்ம கபாலத்தை அழித்தபிறகு, அங்காள பரமேஸ்வரி திருவண்ணாமலைக்குச் சென்று, தீர்த்தத்தில் மூழ்கி சாப விமோசனம் பெற்றாள் என்றும் கூறுகிறார்கள். ஆகவே, திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு விட்டு, மேல்மலையனூருக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் : ராவணன் வம்சத்தினர் வழிபட்ட ஈசன்... திருமணக் கோலத்தில் அம்பிகை!

ராவணன் மாபெரும் சிவபக்தன் என்பதை அனைவரும் அறிவோம். அவன் வம்சத்தில் வந்த பலரும் சிவவழிபாட்டைக் கடைப்பிடித்தவர்கள் என்கின்றன புராணங்கள். அவர்களில் மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் வழிபட்ட ஈசன் ஒருவர் ... மேலும் பார்க்க

திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் சாய்ந்தது அபசகுனமா? - கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?

கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி மிகவும் மகிமை வாய்ந்தது. ஏழரை அடி உயரம் கொண்டு கம்பீரமாக பிரமாண்டத் திருமேனியோடு ... மேலும் பார்க்க

Miraculous Kala Bhairavar | கலியுக அதிசயம் - வேண்டியது அருளும் திருக்குறுங்குடி கால பைரவர் சந்நிதி!

திருக்குறுங்குடி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வைஷ்ணவ நம்பி திருக்கோயில்தான். இந்தப் பெருமாள் திருக்கோயிலுக்குள்தான் சிவன் சந்நிதியும் பைரவர் சந்நிதியும் உள்ளன. இங்குள்ள ஈசனுக்கு மகேந்திரகிரிந... மேலும் பார்க்க

கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமண்யர்: இங்கே வேல் செலுத்தினால் வேண்டுதல் நிறைவேறும்!

முருகப்பெருமான் அருளும் தலங்கள் ஒவ்வொன்றாகத் தேடித் தேடிச் சென்று திருப்புகழ்பாடி நமக்கெல்லாம் அந்த முருகனின் அருட்கடாட்சம் கிடைக்கும்படி வழி செய்தார் அருணகிரிப் பெருமான். அப்படி அவர் பாடிய தலங்களில் ... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம் வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்: மருதாணி அரைத்துப் பூசினால் திருமணம் நிச்சயம்!

காவிரிக்கரைத் தலங்களில் இரண்டு ஆடுதுறைத் தலங்கள் உள்ளன. இரண்டுமே புராண சம்பந்தம் உடையவை. இரண்டுமே குரங்குகள் நீராடி ஈசனை வழிபட்ட தலங்கள். அப்படி ஒரு தலம் தான் வடகுரங்காடுதுறை. இந்தத் தலத்தை ஆடுதுறை பெ... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டம் உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி: தடைகள் நீங்கி வீடு கட்டி முடிக்க ஒரு திருக்கோயில்!

சோழ மன்னர்கள் ஆட்சியில் ஏராளமான திருக்கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றைப் பரிபாலனம் செய்ய நான்கு வேதங்களைச் சார்ந்த அந்தணர்களையும் அதைச் சுற்றிக் குடிவைத்து முறையாக பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்தனர். அப்படி... மேலும் பார்க்க