With Love: "உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும்.!- விஜய் தேவரகொண்டாவுடன் ...
ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் : ராவணன் வம்சத்தினர் வழிபட்ட ஈசன்... திருமணக் கோலத்தில் அம்பிகை!
ராவணன் மாபெரும் சிவபக்தன் என்பதை அனைவரும் அறிவோம். அவன் வம்சத்தில் வந்த பலரும் சிவவழிபாட்டைக் கடைப்பிடித்தவர்கள் என்கின்றன புராணங்கள். அவர்களில் மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் வழிபட்ட ஈசன் ஒருவர் ஈரோடு மாநகரில் அருள்கிறார். வாருங்கள் அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம்.
ஈரோடு நகரத்தில் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.
பொதுவாக ஈரோடு தலமே சிவபெருமானோடு தொடர்புடையதுதான். படைப்பு கடவுளான பிரம்மா தன்னை மறந்து சிவனை பூஜித்ததால், 'மறந்தை' எனவும், 'மயிலை' எனவும், 'ஆர்த்த கபாலபுரி' எனவும் ஈரோடு நகருக்குப் பல பெயர்கள் புராணகாலத்தில் உண்டு என்கின்றனர் புராண ஆய்வாளர்கள்.

ஒருமுறை மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தப் பகுதிக்கு வந்த போது, சந்தியாவந்தனம் செய்து சிவவழிபாடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தனர். அப்போது ஓரிடத்தில், பாதையில் வில்வ தளங்கள் இருப்பதைக் கண்ட அவர்கள், அருகில் சிவாலயம் இருக்கவேண்டும் என்று நினைத்தவர்களாக, அந்த வழியே சென்றார்கள்.காவிரியின் தென் கரையில், வில்வ மரங்களுக்கு இடையில் ஈசன் சுயம்புவடிவில் இருந்தது கண்டு, பரவசத்துடன் வழிபட்டு, திருப்பணிகளும் செய்தனர். அதனால், இத்திருத்தலம் மஹிமாலீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது என்கிறது தலபுராணம்.
கொங்கு நாட்டு சிவன் கோயில்களில் மிகவும் பழமையான சிறப்பை பெற்றது ஈரோட்டில் உள்ள மகிமாலீஸ்வர் கோயில். மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அடியவருக்கு அடியவராக போற்றப்படும் சிவ பெருமான் மகிமாலீஸ்வரராக, மங்களாம்பிகை அம்மனுடன் மகாலிங்கமாக அருள்பாலித்து வருகிறார்.
2000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் சுந்தரர், அப்பர் ஆகியோர் வழிபாடு செய்துள்ளன. இந்தக் கோயிலில் மகாலட்சுமி, துர்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. மங்களாம்பிகை தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் சிவனுக்கு வலப்புறமாக, திருமணக் கோலத்தில் இருப்பதுபோல் காட்சி அருள்கிறார். எனவே, அம்பிகையை வணங்கினால், திருமணப்பேறும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மஹிமாலீஸ்வரரை மனம் உருகி வேண்டினால், நம் கவலைகள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆலயத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று திருமணத் தடைகள் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடை பெறுகிறது. தொடர்ந்து 11 வாரம் விரதமிருந்து, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசித்து பிரார்த்திக்கொண்டால், திருமணத் தடை விரைவில் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிகொடுக்கிறது. 63 நாயன்மார்கள், 16 வகை லிங்கங்களும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரியன்று மஹிமாலீஸ்வரரை வழிபடுவதால், பலன் பன்மடங்கு அதிகம் கிடைக்குமாம். அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மஹிமாலீஸ்வரரை வழிபட்டு, வேண்டிய பலன்களைப் பெற்றுச் செல்கிறார்கள்.
இக்கோயிலின் வரலாறு குறித்த மற்றுமொரு கருத்தும் உண்டு. முன்னொரு காலத்தில் இருக்குவேளிர் வம்சத்தை சேர்ந்த சிற்றரசர்கள் இந்தப் பகுதியை ஆண்டு வந்தனர். கி.பி.10 - ம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட கொங்கு நாட்டுப் பகுதிகளை ஆட்சி செய்த, 'மஹிமாலி இருக்குவேள்' என்ற மன்னன் இக்கோயிலை கட்டி வழிபட்டு வந்ததால் அவனுடைய பெயரிலேயே இத்தலம், ' மஹிமாலீஸ்வரம்' என்று பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.

கோயில் இந்தத் தலத்தில்தான் சுந்தரமூர்த்தி நாயனார் தன் தேவியருடன் இருந்து ஈசனை நினைத்துத் தவம் செய்தார் என்றும் அப்போது சேரமான் பெருமான் நாயனார் அவருக்கு கவரி வீசி சேவகம் செய்தார் என்றும் சொல்கிறார்கள். அப்படி ஒரு காட்சி கோயிலில் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி வரலாற்றுச் சிறப்பும் புராண சிறப்பும் கொண்ட இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை நிச்சயம் மாறும். வளமும் நலமும் சூளும்.




















