வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நி...
'குழந்தைகள் நம் பெருமைக்கான பொருள்கள் அல்ல...' - கதைச்சொல்லி குமார் ஷா
' நாடோடி, இலக்கில்லா திசைகளை நோக்கியே பயணப்பட்டுக்கொண்டிருப்பான்... அந்தப் பயணங்களின் வழி பல இலக்குகளை எட்டியிருப்பான்'
அவ்வாறு நாடக கலைஞர், ட்ராவலர், கதைச்சொல்லி என, தன் பயணத்தின் வழி பல்வேறு பரிமாணங்களை எட்டியிருக்கும் நாடோடிக் கலைஞர் குமார் ஷாவுடன் உப்புக்காத்து படிந்த பெசன்ட் நகர் கடற்கரையில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்.

``என்னைப் பொறுத்தவரையில் கதைகள் நிறைய கேட்கமுடிந்தவனால் தான் ஒரு நல்ல கதைச்சொல்லியாக இருக்க முடியும். இந்தியாவில் 10 மாநிலங்களுக்கு மேல் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் பயணம் செய்திருக்கேன். இந்தப் பயணத்துல நிறைய குழந்தைகளோட, மக்களோட பேசியிருக்கிறேன். ஒரு டீக்கடையில யாருன்னு தெரியாத நபர்கள்கிட்ட பேசும் போதுகூட அவங்க சொல்ற கதையை வைத்து ஒரு படமே எடுக்கலாம்ன்னு தோணும்.

பெரியவங்கள விட குழந்தைகள் நிறைய கதை சொல்லுவாங்க. குழந்தைகளுக்கு கதை சொல்றதுக்காக எந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனாலும் உடனே அங்க இருக்கிற குழந்தைகள் கிட்ட கதையைச் சொல்ல தொடங்க மாட்டேன். அவங்க கூட போய் உட்கார்ந்து அவங்களுக்குள்ள பேசுறதை கவனிப்பேன். குழந்தைங்க அவங்க சொல்றதை நம்ம கவனிச்சாலே நம்ம சொல்றதை அவங்க கவனிக்க ஆரம்பிச்சிடுவாங்க. நம்ம இன்னும் காட்டுக்கு சிங்கம்ன்னே கதை சொல்லிட்டு இருக்கோம். ஆனா குழந்தைகளோட கதைல குரங்கும் காக்காவும் ராஜாவா, ராணியா இருக்கிறதா கற்பனை பண்ணி கதை சொல்லுவாங்க. நானும் அவங்க சொல்றதை கேட்க ஆரம்பித்து விட்டேன்" என்று சிரிக்கிறார்.
'காக்கா பப்ளிக்கேஷன்ஸ்' ஆரம்பிச்சிருக்கீங்களாமே அதைப் பத்தி சொல்லுங்க?
"இது குழந்தைகளுக்கான பப்ளிக்கேஷன்ஸ்ன்னு சொல்லலாம். ஒரு பெண்ணோட மாதவிடாய் பற்றியோ, திருநங்கைகளின் பாலினமாற்று அறுவை சிகிச்சை பற்றியோ அவங்க சொல்ற கருத்துகளை வச்சு என்னால எழுத முடியுமே தவிர... அவங்களோட உணர்வுகளை முழுமையா என்னால கடத்திட முடியாது. அதுபோல தான் 'குழந்தைகளோட இலக்கியத்தை' அவங்க தான் படைக்கனும். இதோட முக்கிய நோக்கமே குழந்தைகள் எழுதக்கூடிய அல்லது சொல்லக்கூடிய கதைகளை டாக்குமென்ட் செய்து புத்தக வடிவுல கொண்டுவருவது தான்.

குழந்தைகள் பற்றி பெரியவர்கள் ஆராய்ச்சி செய்து எழுதினாலும் `காக்கா பப்ளிக்கேஷன்ஸ்ல' வெளிக்கொண்டுவரும் ஐடியாவும் இருக்கு. கூடிய சீக்கிரமே சிறப்பு குழந்தைகளோட ஒரு ஓவிய புத்தகம்கூட வெளியாக இருக்கு. அதுமட்டுமல்லாம தென்னிந்தியாவுல இருக்கிற Downsydrome, Visually and hearing challenged குழந்தைகள், சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளில் இருக்கிற குழந்தைகள் ஆகியோர் எழுதிய கதைகள் மற்றும் அவர்கள் வரைந்த ஓவியங்களையும் கொண்டு வர இருக்கிறோம்."
தற்போதைய சூழலில் குழந்தைகள் பெரியோர்களுக்கு இடையேயான உறவு பற்றி ?
"காலங்காலமாக பெரியவங்களான நாம குழந்தைகளுக்கு கதைகளை சொல்லியே பழகிட்டோம். அவங்களை நம்ம உலகத்துக்கு இழுத்துட்டு வர்றோமே தவிர, அவங்களோட உலகம் என்னவா இருக்குங்கிறதைக்கூட நம்ம பாக்குறதே இல்லை. நமக்கு ஒரு தங்க மோதிரம் காணாமல் போனால் எவ்வளவு கஷ்டமாக இருக்குமோ, அதே போலத்தான் ஒரு குழந்தைக்கு அதற்கு பிடித்த கோலிக்குண்டோ, பென்சிலோ தொலைந்தால் கஷ்டமா இருக்கும். இன்னைக்கு சில பெற்றோர்கள் Schedule போட்டு குழந்தைகளை வளர்ப்பதையெல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு. குழந்தைகள் நம்மோட பெருமைக்கான `பொருள்'கள் இல்ல. அவங்களும் ஓர் உயிர்.

குழந்தை வளர்ப்பு சார்ந்து பத்து புத்தகங்களோ அல்லது `30 நாள்களில் குழந்தைகளை தெரிந்து கொள்வது எப்படி?' ன்னு வீடியோஸ் போன்றவற்றை பார்த்து வளர்க்கனும்னு அவசியம் இல்லை. குழந்தைகள்னாலே இயல்பு தான் ! ஆகையால இயல்பாக அவங்க கிட்ட பேசி, அவங்க சொல்றதை நாம் காது கொடுத்து கேட்டு வளர்த்தாலே போதும்ன்னு நான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட 20 வருசமா குழந்தைகளோட பயணப்படுறேன்.

குழந்தைகள் பொய் சொல்றதுக்கு பயப்படுவாங்க. பொய் சொன்னவங்களை நம்புறதுக்கு பயப்படுவாங்க. அவ்ளோதான் குழந்தைகள். இப்போ என்னோட வீடு முழுக்க குழந்தைகளோட கதைகள்தான் நிறைந்து இருக்கு. இன்னும் நிறைய குழந்தைகளோட கதைகளை சேகரிச்சு குழந்தைகளின் கதைகளுக்கு மட்டுமே ஒரு நூலகம் தொடங்கனும்னு ஆசை இருக்கு." எனக் கூறி நம்பிக்கையுடன் மிளிர்கிறார், குமார் ஷா.ட்க



















