'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் எங்கள் பங்களிப்பு லாபத்திற்காக அல்ல!' - ஜாய்...
``கேரள பாஜக-வில் இருந்து விலகி..! ; தவெக-வில் இணைய சொல்லி விஜய் கேட்டார்" - நடிகர் தேவன்
தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகர் தேவன்.
2004-ஆம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை நிறுவினார். 2004, 2006-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
2020-ஆம் ஆண்டு நவ கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை மீண்டும் நிறுவினார். இந்தக் கட்சியை அடுத்த ஆண்டே, அதாவது 2021-ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைத்து, பாஜகவில் தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
தற்போது பாஜகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த நெஞ்சினிலே, ஷாஜகான், சிவகாசி ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைய இருப்பது குறித்து தேவன் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
“நான் பாரதிய ஜனதா கட்சிக்காக மிகவும் தீவிரமாகவும், துணிச்சலாகவும், பல ஆபத்துகளை எதிர்கொண்டும் தீவிரமாகப் பணியாற்றி வந்தேன்.
ஆனால், அவர்களால் என்னுடைய லட்சியத்தையும், திட்டமிடலையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் இதற்கெல்லாம் எதிர்ப்பாக இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேர்தலில் வெற்றி பெறுவதில் விருப்பமில்லை என்றுதான் நினைக்கிறேன். பணம் ஈட்டவே ஆர்வம் காட்டுகிறார்கள். அதை நான் எதிர்த்தேன்.
என்னை ஒரு கட்டத்திற்குள் பூட்டி வைக்கப் பார்த்தார்கள். 2024-25 காலக்கட்டத்தில், இந்தக் கட்சியிலிருந்து விலகலாம் என்று நான் யோசிக்கத் தொடங்கினேன். பா.ஜ.க.-வில் தொடர்ந்து நீடிப்பதன் மூலம் ஒரு அரசியல்வாதியாக என்னுடைய லட்சியம் நிறைவேறாது என்று நினைத்தேன். அதனால் பா.ஜ.க.-விலிருந்து ராஜினாமா செய்தேன்...
இதைப் பார்த்த ஜோசப் விஜய், சிலரை என்னிடம் அனுப்பி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய எனக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார்.

எங்களுக்குள் மிகவும் விரிவான, சுவாரசியமான உரையாடல் நடந்தது. இறுதியாக, சென்னையில் உள்ள தவெகவின் மூத்த தலைவர்களுடன் ஆன்லைனில் ஆலோசனை நடத்தினேன். கொள்கை அளவில் நான் அதற்குச் சம்மதித்தேன்.
எனவே, ஜோசப் விஜயைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவரைச் சந்திப்பதற்காகச் செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
அந்தச் சந்திப்புக்கான வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். எனவே, இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன்.” என்றிருக்கிறார்.











