சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!
சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! - காரணம் என்ன?
நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக இந்தியர்கள் 288 பேர் அடங்குவர். தவிர, சீனா (100), அமெரிக்கா (65), உக்ரைன் (53), ஆஸ்திரேலியா (35) மற்றும் பிரிட்டன் (33) ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்தது. அப்போது நேபாள அரசு, 'சர்வதேசத் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுமதிக்க முடியாது. நாட்டின் சொந்த மீட்புக் குழுக்களே மீட்புப் பணிகளைச் சமாளிக்க வல்லவை' என சர்வதேச உதவியைப் புறக்கணித்தது.
நேபாளத்தின் இந்த முடிவிற்கு முக்கியக் காரணம், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தின் போது அது பெற்ற அனுபவமே ஆகும்.
வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏராளமான வெளிநாட்டுத் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வந்தபோது எழுந்த ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மைச் சிக்கல்களை நேபாள அரசாங்கம் நினைவு கூர்ந்தது. பல குழுக்கள் இருந்தும், நாடுகளுக்கு இடையேயான போட்டியால், மீட்புப் பணிகளை நிர்வகிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தின.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளின் தூதரக அழுத்தங்களைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில தொழில்நுட்ப உதவிகளைப் பெற நேபாளம் சம்மதித்துள்ளது.

அதன் அடிப்படையில், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் நிபுணத்துவ உதவிகளைப் பெற நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக சுரங்கப் பாதை மீட்புப் பணிகள், டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகள் போன்ற சிறப்புத் துறைகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்களை அனுமதிக்கத் தீர்மானித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் மருத்துவக் குழு, சுரங்கப் பாதை மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவை நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேபாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கனாலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெனரேட்டர்கள், உணவுப் பொட்டலங்கள், குடிநீர் சுத்திகரிப்பு, மாத்திரைகள் உள்ளிட்ட 10 டன் நிவாரணப் பொருட்களுடன் 4 விமானங்கள் நேபாளம் சென்று சேர்ந்துள்ளன. அத்துடன், 11 பேர் கொண்ட மருத்துவ மற்றும் சுரங்க மீட்பு நிபுணர்கள் குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது. உடல்களை விரைவாக அடையாளம் காணவும், டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொள்ளவும் போதிய உள்கட்டமைப்பு இல்லாததால், சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் பணிகளை விரைவுபடுத்த நேபாள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



















