`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' - மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!
`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்து கைபேசி, பென் டிரைவ் மற்றும் ஒரு குறிப்பேடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் சிறை அறைக்குள் கைபேசி எப்படி வந்தது என்பது குறித்து சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டி.ஐ.ஜி. ஜினேந்திர கனகவி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறைக்குள் இந்தச் சாதனம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அதை வழங்கியது யார், எவ்வளவு காலம் பயன்பாட்டில் இருந்தது மற்றும் சிறை அதிகாரிகள் அல்லது பிற ஊழியர்கள் இதற்குக் உடந்தையாக இருந்தனரா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆராயுமாறு விசாரணை குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உதவி கண்காணிப்பாளர் இரன்னா ரங்காபூர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் ரேவண்ணாவின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்களின் தொலைபேசி எண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. புலனாய்வாளர்கள் அந்த எண்களையும், கைபேசியிலிருந்து பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சிறைக்குள் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கைபேசி கடந்த மார்ச் மாதத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளது என்றும், இன்னும் பல கைபேசிகள் சிறைக்குள் கடத்தப்பட்டு பயன்பாட்டில் இருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
Rape accused & former MP Prajwal Revanna seen casually talking on the phone inside his prison cell while wearing personal clothes instead of the prison uniform. The exact date when video was taken is unknown. CCB had conducted raids & found a phone yesterday in his cell. pic.twitter.com/GtWIT7EVzS
— Deepak Bopanna (@dpkBopanna) August 12, 2026
பணம் பெற்றுக்கொண்டு சிறை அதிகாரிகளே கைபேசியைப் பயன்படுத்த உதவியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
முன்னதாக குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகள் சோதனையிட வந்தபோது சிறை வளாகத்திற்குள் நுழைய தாமதம் ஏற்பட்டதாகவும், அந்தச் சமயத்தில் சிறை ஊழியர்களும் கைதிகளும் எச்சரிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பொருட்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனிடையே, ரேவண்ணா கைபேசியைப் பெற உதவிய எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருக்கிறது.
இதற்கிடையே, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் பாதுகாப்புப் பிரிவுகள் 1, 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மேலும் மூன்று கைபேசிகளும் இரண்டு பென் டிரைவ்களும் கைப்பற்றப்பட்டு, பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சாதனங்களில் ஆபாசமான அல்லது ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் இருந்ததாக வெளியான தகவல்களை எலக்ட்ரானிக் சிட்டி பிரிவு துணை ஆணையர் எம். நாராயணா மறுத்துள்ளார். அதே சமயம், சிக்னல் ஜாமர்களைத் தாண்டி குறிப்பிட்ட வகை ஆண்ட்ராய்டு போன்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்துத் தொழில்நுட்பத் தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.















