ADMK: அதிமுக கூட்டணியில் ஐக்கியமான `அன்புமணி' பாமக - டெல்லி செல்லும் எடப்பாடி பழ...
சென்னை: `வீதிவிருது' விழாவில் இரண்டாம் பரிசு பெற்ற பெருஞ்சலங்கை ஆட்டக்காரர்கள்!
சென்னையில் மாற்று ஊடக மையத்தினால் நம் மண்ணின் கலைஞர்களுக்கு விருது வழங்கும் 'வீதி விருது விழா' வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. 13-ஆம் ஆண்டு வீதி விருது விழா கடந்த 3 ஆம் தேதி சென்னை முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது மண்சார்ந்த பாரம்பர்யக் கலைவடிவங்களை நிகழ்த்தினர். இதில் பல்வேறு திரை கலைஞர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலைஞர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பெருஞ்சலங்கை ஆட்டக் கலைஞர்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு பேசத் தொடங்கினோம்.

"நாங்கள் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகிலுள்ள வெள்ளிவளசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய 'கிங் மேக்கர் சலங்கை ஆட்டக்குழு' வில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய கலையை 6 வயது குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை எல்லாருமே கற்றுக்கொள்கிறார்கள். எங்களுடைய குழுவில் பெண்களும் பெரும்பங்கு வகிக்கிறார்கள். எங்களுடைய கலையை, திருவிழாக்களிலும் பொதுமேடைகளிலும் நிகழ்த்தி வருகிறோம். இதுவரைக்கும் 80 பொது வெளிமேடைகளில் எங்களுடைய பெருஞ்சலங்கை ஆட்டத்தை நிகழ்த்தியிருக்கிறோம்" என கிங் மேக்கர் சலங்கை ஆட்டக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கிங்மேக்கர் சலங்கை ஆட்டக்குழுவினரின் தலைவர் மகேந்திரனிடம் பேசும் போது,
"எங்களுடைய இந்தக் கலையை கொங்கு மண்டல பகுதி மக்கள் மட்டுமே அறிந்திருக்கும் கலையாக அல்லாமல் எல்லா தரப்பு மக்களிடமும் எங்களுடைய கலையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய முதன்மையான நோக்கம். எங்களுடைய கலையை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பாக இந்த வீதிவிருது விழா அமைந்துள்ளது. இதில் எங்கள் குழுவினருக்கு இரண்டாம் பரிசாக ரூ.50,000 க்கான பணமுடிப்பும், சான்றிதழும் கிடைத்திருப்பது பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது" என்று தெரிவித்தார்.
- சு. சி. வீரகுந்தவை


















