Gold: நகை வாங்குவதற்கும் சரி, முதலீடு செய்வதற்கும் சரி இதுதான் சூப்பர் நேரம்; ஆன...
'டாஸ்மாக்-கிற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' - அமைச்சர் விக்னேஷின் பதில் என்ன?
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற அமைச்சர் விக்னேஷ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "தமிழகத்தில் பொதுமக்களுக்குப் பாதிப்பை அல்லது இடையூறை ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்டிப்பாக அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும்.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள கடைகளின் பட்டியலை மீண்டும் மறுஆய்வு செய்து, புதிய லிஸ்ட் எடுக்கும் பணிகளை துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்துவது மற்றும் கடைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக புதிய சட்டவரைவு (Draft Law) தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு நாள்களில் அரசின் உயர்மட்ட அளவிற்கு உடனே கொண்டு செல்லப்பட்டு விரைவில் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.
மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அவை அனைத்தையும் கண்காணித்து, புகார்கள் மீது உடனுக்குடன் தகுந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளை தனியாருக்குத் தாராளமாகத் திறந்துவிடும் யோசனை தற்போதைக்கு அரசிடம் எதுவும் இல்லை. ஆனால், தொடர்ந்து செய்தியாளர்களும், பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி வருவதால், எதிர்காலத்தில் அதைப் பற்றியும் யோசிக்க வேண்டிய நிலை அரசுக்கு வரும்" என்று கூறினார்.
'அரசுத் துறைகளில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது போல் டாஸ்மாக் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' என்ற கேள்விக்கு, "டாஸ்மாக் துறையே ஒரு வெள்ளை அறிக்கைதான், அதில் உள்ள அனைத்தும் அப்படியே வெளிப்படையாகத் தெரிகிறது. டாஸ்மாக் பார் மற்றும் கடைகளில் முறைகேடுகள் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு சார்பில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
















