மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசா...
"திராணி இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க விஜய் தயாரா?" - ஆர்.எஸ்.பாரதி சவால்
சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேடினேன், தேடினேன் ஒன்றுமே கிடைக்கவில்லை ஆகவே பழைய பஞ்சாகத்தைப் பாடுவோம் என்பதைப் போல முதல்வர் விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்திருக்கிறார்கள்.

இவர் பிறப்பதற்கு முன்பு கொடுக்கபட்ட ஒரு புகாரை எடுத்துக்கொண்டு இன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 100, 110 நாட்களில் நடைபெற்றிருக்கக்கூடிய கொலைகள், பாலியல் குற்றங்கள், திருட்டுகள் போன்றவற்றை ஆதாரத்தோடு குறிப்பிட்டு குற்றம்சாட்டினார்.
அதேபோல எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எடப்பாடி அவர்களும், மற்ற கட்சி உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்லுவதற்கு அருகதை இல்லாமல், யோகிதை இல்லாமல் தைரியம் இல்லாமல் துணிச்சல் இல்லாமல் பேசியிருக்கிறார்.
சர்க்காரியா கமிஷன் பற்றி முதல்வர் விஜய்க்குத் தெரியுமா? சர்க்காரியா கமிஷன் நடைபெற்றபோது நான் கலைஞருடன் இருந்தவன். அண்ணாசாலையில் அண்ணா தியேட்டர் இருக்கிறது. அந்தத் தியேட்டர் கருணாநிதிக்குச் சொந்தம் என்று சர்க்காரியா கமிஷனில் புகார் எழுதி கொடுக்கப்பட்டது.
முதல்வர் விஜய்க்குத் தெம்பு இருந்தால் திராணி இருந்தால் அந்தத் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிய விஜய் அவர்கள் அண்ணா தியேட்டர் யாருக்குச் சொந்தம் என்று சொல்ல வேண்டும்.
அது சேட் ஒருவருக்குச் சொந்தமானது. ஆனால் கருணாநிதிக்குச் சொந்தமானது என்று புகார் கொடுக்கப்பட்டது. சர்க்காரியா கமிஷன் பற்றி நேருக்கு நேர் திமுகவினருடன் விவாதிக்க விஜய் தயாரா? சினிமாவில் பேசுவது போல எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டைப் பேசியிருக்கிறார்" என்று விமர்சித்திருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.











