போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' - உக்ரைன் எடுத்திருக்கும் முடிவி...
லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்... ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்!
வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வாக்கில், முதல்வர் விஜய் லண்டன் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச்சூழலில், அவருடைய பயணம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த `வெற்றி தமிழ்நாடு' முதலீட்டாளர்கள் மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேற்கொண்டு வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார் முதல்வர் விஜய்.
ஐரோப்பாவைச் சேர்ந்த தொழிலதிபர்களைச் சந்தித்து பேசவும் நிகழ்ச்சி நிரல்கள் தயாராகின. 'டிப்ளமேட்டிக்' பாஸ்போர்ட் நடைமுறைகளுக்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் சென்றுவந்தார் முதல்வர். இந்தச் சூழலில், ஆளுநர் அர்லேக்கரிடமிருந்து வந்த போன்காலைத் தொடர்ந்து, தனது லண்டன் பயணத்தை முதல்வர் தள்ளிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், "பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் 'ப்ரிக்ஸ்' உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகிறார். 13-ம் தேதி டெல்லியில் மாநாடு நிறைவுற்றவுடன் சென்னை வர திட்டமிட்டிருக்கும் அன்வர் இப்ராஹிம், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறார். த.வெ.க அரசு அமைந்தவுடன், முதல்வர் விஜய்க்கு முதலில் வாழ்த்துச் சொல்லிய வெளிநாட்டு தலைவர் அன்வர் இப்ராஹிம்தான்.
இந்தத் தகவல் முதல்வர் அலுவலகத்துக்குச் சொல்லப்பட்டபோது, 'முதல்வர் லண்டன் செல்கிறாரே... இப்போது அவரைச் சந்திப்பது கடினம்' என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விவரத்தை தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு மலேசிய தூதரக அதிகாரிகள் கொண்டு சென்றிருக்கிறார்கள். உடனே, முதல்வரிடம் ஆளுநர் அர்லேக்கரே போனில் பேசியிருக்கிறார்.
'ஒரு நாட்டின் பிரதமர் உங்களைச் சந்திப்பதற்காகத்தான் சென்னை வர திட்டமிட்டிருக்கிறார். இந்தச் சூழலில் நீங்கள் அவரை சந்திக்காமல் போவது சரியாக இருக்காது. உங்களுடைய லண்டன் விசிட்டை கொஞ்சம் தள்ளி வையுங்கள்...' என்று ஆளுநர் கோரவும், தன்னுடைய லண்டன் விசிட்டை சற்று தள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் விஜய்.
செப்டம்பர் 13-ம் தேதி, சென்னை கிண்டியிலுள்ள ஐ.டி.சி சோழா நட்சத்திர விடுதியில் மலேசிய பிரதமர் தங்குவதற்கு அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் இரவு ஆளுநர் மாளிகையில் மலேசிய பிரதமருக்கு 'டீ' பார்ட்டி அளிக்கவும் திட்டமிடப்படுகிறது. அப்போது முதல்வருடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கலந்துரையாடலாம்" என்றனர்.

கடந்த செப். 2023-ல் மலேசியா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்தை தன் வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்தினார் அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம். தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுடன் நல்ல தொடர்பில் இருக்கும் அன்வர் இப்ராஹிம், முதல்வர் விஜய்யை சந்திக்க ஆவலாக இருப்பது கோட்டை வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.!










