``கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த விஜய் ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து" - உதயந...
Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்
நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
வாழ்த்து தெரிவித்த அவர், "50 படங்களுக்கு மேல் இணைந்து நடித்திருக்கிறோம். நான் மரியாதையுடனும் அன்போடும் 'இச்சக்கா' என்று அழைக்கும் மனிதருக்கு எனது இதயப்பூர்வமான 75-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமா வரலாற்றிலேயே இரண்டு முன்னணி நடிகர்கள் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு.

திக்கா குரிசி, கொட்டாரக்கரா, சத்யன், நசீர் போன்ற மாபெரும் முன்னோடிகள் விட்டுச்சென்ற கலைப் பாரம்பர்யத்தை நாங்கள் இருவரும் இணைந்து முன்னெடுத்துச் சென்றோம்.
நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் சரி, தனித்தனிப் படங்களில் நடித்திருந்தாலும் சரி, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு எப்போதும் முழுமையான உழைப்பைக் கொடுக்கவே முயன்றிருக்கிறோம்.
எங்களுக்குள் ஒருபோதும் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை. மாறாக சினிமா மீது இருவருக்குமே எல்லையற்ற காதல் இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், என்னை விடவும் சினிமா மீது அதிக பற்றும் காதலும் கொண்டவர் என் இச்சக்காதான்.
அந்த ஆர்வத்தை ஒரு துளி கூடக் குறையாமல் இன்றுவரை அவர் பாதுகாத்து வருகிறார். சில காலத்திற்கு முன்பு இச்சக்காவின் வாழ்க்கையில் ஒரு சவாலான கட்டம் கடந்து சென்றது.
அந்தக் கடினமான நேரத்திலும், நல்ல சினிமாக்களைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்கிற அவருடைய ஆர்வம் எனக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

'இதுவும் கடந்து போகும்' என்று நாங்கள் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக்கொண்டோம். கடவுளின் அருளால் அதுவே நடந்தது. அவர் என்றும் எனக்குப் பின்னால் பலமாக இருக்கிறார் என்ற உணர்வே எனக்குத் தனி தைரியத்தைத் தருகிறது.
என் இதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கும் ஒரு நல்ல நண்பராக, ஆச்சரியப்படுத்தும் சிறந்த நடிகராக, வாழ்க்கையின் கடினமான தருணங்களில் தோள் கொடுக்கும் மூத்த சகோதரராக அவர் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















