Iran War: USக்கு கெடு விதித்த ஈரான் - Israel-ஐ மிரட்டும் Houthi | Yemen | Saudi ...
நாகர்கோவில் வடிவீஸ்வரம் சுந்தரேஸ்வரர் கோயில்: இந்திரன் வழிபட்ட ஈசன்; திருமணவரம் தரும் பள்ளியறை பூஜை!
திருத்தலங்களில் தேவர்கள் பிரதிஷ்டை செய்த கோயில்கள், முனிவர்கள் பிரதிஷ்டை செய்த கோயில்கள், மகான்கள் பிரதிஷ்டை செய்த கோயில்கள், மனிதர்கள் பிரதிஷ்டை செய்த கோயில்கள், தானே ஈசன் உருவாகிக்கோயில் கொண்ட சுயம்புத் தலங்கள் என வகைப்படும்.
இவற்றில் தேவர்கள் பிரதிஷ்டை செய்த திருத்தலங்கள் மிகவும் பழைமையானவை மட்டுமல்ல... சிறப்பும் சாந்நித்தியமும் நிறைந்தவை. அப்படி ஓர் ஆலயம்தான் நாகர்கோவில் வடிவீஸ்வரம் சிவாலயம்.
கல்யாணப் பிரார்த்தனைக்கான தலங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கே வந்து, சுயம்வர பார்வதி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் கல்யாணம் கூடிவரும்; பள்ளியறை பூஜையில் பால் சமர்ப்பித்து வழிபட்டால் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

இத்தலத்தில் உள்ள ஈசன் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இங்கே அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரராக ஈசன் அருள்பாலிக்கிறார். பெரிய தெப்பக்குளத்துடன் அழகுற காட்சி தருகிறது ஆலயம்.
இக்குளத்தையொட்டி கோயிலின் கிழக்கு வாயில் அமைந்துள்ளது. சுவாமி கிழக்கு நோக்கி அருள்கிறார். எனினும் அம்பாளுக்கான தெற்கு வாயிலுக்கே பெரிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு வாயிலில் நுழைந்து வலமாக வந்தால் விநாயகர், தட்சிணாமூர்த்தி, உற்சவ மூர்த்தங்கள், மகாவிஷ்ணு, நாகராஜர், காசி விஸ்வநாதர், தேவியருடன் அருளும் முருகப்பெருமான், நடராஜர், சனீஸ்வரர், சூரிய-சந்திரர், நவகிரக மூர்த்தியர் மற்றும் நாயன்மார்களைத் தரிசிக்கலாம்.
இங்குள்ள மண்டபத்தின் விதானத்திலும் நவகிரகங்கள் காட்சி தருகின்றனர். சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, சண்டேஷ்வரர், ராகு, கேது, பெருமான், யாகசாலை அறை, சந்திரன், சூரியன், சனீஸ்வரர், நாயன்மார்கள் சன்னதிகள் தனித்தனியாக அமைந்திருக்கின்றன.
கோயில் மஹாமண்டபத்திலும், வெளிபிரகாரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கல் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாசலில் வந்ததும் கொடிமரத்தைத் தரிசிக்கலாம். கொடிமரம் அமைந்துள்ள மண்டபத்தின் மேல் பகுதி கூரையிலும் நவகிரகங்கள் காட்சி தருகின்றன.

திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற இத்தலத்தின் தலபுராணம் முக்கியமானது. ஒருமுறை விதிவசத்தால் சாபத்துக்கு ஆளான விமோசனம் வேண்டி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட தீர்மானித்தான்.
அதன்படி இரண்டு லிங்கங்களை எடுத்துவந்த இந்திரன், அவற்றில் ஒன்றை இங்கே வடிவீஸ்வரத்தில் ஸ்தாபித்தான். மற்றொன்றை சுசீந்திரத்தில் பிரதிஷ்டை செய்தான் என்பது ஐதீகம்.
இங்கே அவன் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டது மாலை வேளையில். ஆகவே இந்தக் கோயிலில் மாலையில் நடைபெறும் சாயரட்ச பூஜை விசேஷம். இந்திரன் தனது யானையான ஐராவதத்தை அனுப்பி ஒழுகினசேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரச் செய்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தானாம். இன்றைக்கும் மாசிமாதம் அந்த ஆற்றில் ஸ்வாமி ஆறாட்டு வைபவம் நிகழ்கிறது.
வடிவு என்றால் அழகு என்று அர்த்தம். ஈஸ்வரன் என்ற பெயர் சிவபெருமானைக் குறிக்கும். அழகே உருவான அழகம்மனுடன் சுந்தரேஸ்வரர் கோயில் கொண்டிருப்பதால் இந்தத் தலத்துக்கு வடிவீஸ்வரம் என்று திருப்பெயர்.
மண்டைக்காடு கோயிலில் பகவதி அம்மன் ஶ்ரீசக்கரத்தில் அமர்ந்திருப்பாள். இங்கேயோ அம்பாள் ஶ்ரீசக்கரம் போன்ற பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

திருக்கோட்டாற்றுப் பதிகத்தில் இந்தத் தலம் பற்றி திருஞானசம்பந்தர் பாடி உள்ளார். நாகராஜா கோயிலைப் போன்று கேரளா ஆகமப்படி இது ஓட்டுக் கோயிலாகவே இருந்தது. பிற்காலத்தில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பெளர்ணமி தினங்களில் அழகம்மன் தேரில் பவனி வருவாள். பெண்களே அதிகம் வடம்பிடிப்பது சிறப்பு.
அற்புதமான இந்த ஆலயத்தில் சித்திரை விஷு, வைகாசி விசாகம், ஐப்பசியில் திருக்கல்யாணம், கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், சொக்கப்பனை வைபவம், மார்கழி வழிபாடுகள் - ஆருத்ரா தரிசனம், மாசித் திருவிழா, பங்குனி உத்திரம், புரட்டாசியில் நவராத்திரி எனத் திருவிழாக்கள் சீரும் சிறப்புமாக நடைபெறுகின்றன.
குழந்தைப் பாக்கியம், திருமணப்பேறு கிடைக்கவும், குடும்பப் பிரச்னைகள் தீரவேண்டியும் எண்ணற்ற பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த ஆலயத்தில் சுயம்வர பார்வதி அர்ச்சனை செய்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு, தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் ஆகும் என்பது நம்பிக்கை.
அதேபோல், இங்கே சாயரட்சை பூஜை விசேஷம். இதில் கலந்துகொண்டு தரிசித்தால் சகல நன்மைகளும் கைகூடும்.
பள்ளியறை பூஜையின்போது பால் சமர்ப்பித்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பயன்கண்ட பக்தர்கள்.




















