நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை ...
"நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்"- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே மதுரையில் நேற்று (பிப்.13) திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆட்சியில் பங்கு கிடையாது என காங்கிரஸுக்கு மீண்டும் தெரிவித்திருந்தார்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "நாங்கள் காங்கிரஸிடம் நிலைமையை சொல்கிறோம்.
நாம் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது என்று சொல்கிறோம். அவ்வளவு தான் சொல்கிறோமே தவிர கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை.
அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. ஆட்சியில் பங்கு கிடையாது என்று முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார்.
93 இடம் தான் கலைஞர் வைத்திருந்தார், ஆனால் அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி இப்போது கொடுக்க முடியும்.
150-ல் இருந்து 160 தொகுதியில் உதயசூரியன் ஜெயிக்கும். நீங்கள் பாருங்கள். 170 தொகுதியில் நிப்போம், 150 தொகுதியில் இருந்து 160 தொகுதி வரை ஜெயிப்போம். உதயசூரியன் ஜெயிக்கும்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 2021-ல் 173 -ல் போட்டியிட்டு 133 வெற்றி.. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
இதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில் 40 இடங்களை கேட்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.















