அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆட...
நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை - கலங்கும் மக்கள்!
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரிவால்டோ என பெயரிடப்பட்ட ஆண் யானை, காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்து. மனிதர்களுடனான பிணைப்பு மற்றும் நட்பின் அடையாளமாக அறியப்பட்ட இந்த யானையின் இறப்பு குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பழங்குடிகள் மற்றும் சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர் ஒடியன் லட்சுமணன், தனது பதிவில், "முதுமலை புலிகள் காப்பகத்தில் 1964-ல் சீகூர் ஓடை அருகே டவிடார் என்ற இயற்கை ஆர்வலர் ஒரு வீட்டைக் கட்டினார். அதற்கு 'சீட்டல் வாக்' என்று பெயர் சூட்டினார். மற்ற வீடுகளைப் போல அங்கு வேலிகள் கிடையாது. `யானைகளும் சிறுத்தைகளும் கடந்து போகும் பாதைக்கு நான் ஏன் வேலி போட வேண்டும்?' என்று கேட்டவர் அவர். இந்தச் சூழலில்தான் ஒரு குட்டி யானை அந்த வீட்டு வராண்டாவிற்கு அடிக்கடி வரத் தொடங்கியது.
மனிதர்கள் தங்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்பதை அந்த யானை அங்கேதான் கற்றுக்கொண்டது. டவிடாரின் மகன் மார்க் டவிடார், அந்த இளம் யானைக்கு `ரிவால்டோ' என்று பெயரிட்டார்.
நாளடைவில் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் ரிவால்டோ ஒரு 'செல்லப்பிள்ளையாக மாறியது. 2013-ம் ஆண்டு ரிவால்டோவின் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு. அதன் உற்ற நண்பனான மார்க் டவிடார் காலமானார். மார்க் இல்லாத அந்த வீட்டில், திறக்கப்படாத வாசலில் ரிவால்டோ பல மணி நேரம் திகைத்து நின்ற காட்சிகள் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது.

அதே காலக்கட்டத்தில், ஒரு வேட்டைக்காரனின் கண்ணியிலோ அல்லது காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியிலோ ரிவால்டோவின் தும்பிக்கையின் நுனி துண்டிக்கப்பட்டது. ஒரு யானைக்கு தும்பிக்கைதான் கை, மூக்கு, வாய் எல்லாம். தண்ணீர் குடிக்கவும், கிளைகளை ஒடிக்கவும் ரிவால்டோ பெரும் போராட்டத்தை சந்தித்தது. ஆனாலும், அது காட்டை விட்டு விலகவில்லை. தும்பிக்கை காயத்தால் அவதிப்பட்ட ரிவால்டோவுக்கு மக்கள் வாழைப்பழங்களையும் உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்தனர். 50 வயதைக் கடந்த அந்த முதிய யானை, ஊருக்குள் வந்தாலும் ஒரு குழந்தையைக் கூட மிரட்டியதில்லை.
காட்டின் ஆக்ரோஷமான குணம் இல்லை. மாறாக முதிர்ந்த ஒரு மனிதனின் நிதானம் அதனிடம் இருந்தது. வயது முதிர்வு மற்றும் சக யானைகளுடன் ஏற்பட்ட மோதலால் உடல் நலிவுற்ற ரிவால்டோ, கடந்த சில நாள்களாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தது. வாழைத்தோட்டம் கிராமத்தில் படுத்த படுக்கையாக தவித்த ரிவால்டோவுக்கு வனத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், இன்று அந்த நீலகிரி மலைகளின் காற்று தன் நேசத்திற்குரிய ஜீவனை தழுவிக்கொண்டது. ரிவால்டோவின் மூச்சு நின்றது.

ரிவால்டோவின் மரணம் ஒரு யானையின் இறப்பு மட்டுமல்ல. மனிதன் நினைத்தால் ஒரு காட்டு விலங்குடன் கூட அன்பால் பிணைக்கப்பட முடியும் என்பதற்கு ரிவால்டோ ஒரு வாழும் சாட்சியாக இருந்தான். மாவனல்லா மற்றும் பொக்காபுரம் காடுகள் இனி ரிவால்டோவின் கம்பீரமான பிளிறலைக் கேட்க முடியாது. ஆனால் ரிவால்டோ விட்டுச் சென்ற அந்த 'அமைதி' என்றும் அந்தப் பாதைகளில் உலவிக்கொண்டிருக்கும். ரிவால்டோவுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி" என குறிப்பிட்டுள்ளார்.





















