ஈரான் போர்: கச்சா எண்ணெய் அழுத்தத்தை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்? - ட்ரம்ப் ப...
"நான் இருந்த இயக்கத்தில் தனி அணி உருவாக்கியதில்லை; நேர்மையுடன் பணியாற்றினேன்" – ஓ.பி.எஸ்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், " அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த காலத்தில் நான் ஒருபோதும் தனி அணியை உருவாக்கவில்லை, கட்சிக்கு நேர்மை மற்றும் உண்மையுடன் பணியாற்றினேன்.
50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சியின் கொள்கைக்கு நேர்மையாகவும், வழங்கப்பட்ட பொறுப்புகளை மனசாட்சியுடன் நிறைவேற்றியுள்ளேன்.
நான் இருந்த இயக்கத்தில் தனி அணி அமைக்கவில்லை, அத்தகைய எண்ணமே எனக்கு இருந்ததில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் பணியை செய்தேன்.
எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய நோக்கததில் இருந்து விலகி, தொண்டர்களின் உரிமைகள் பறித்து விட்டது. எம்ஜிஆரின் அதிமுக அபகரிப்பு அதிமுகவாக மாறியிருக்கிறது. குறுக்கு வழியால் வந்தவர்களால் நான் எப்படி பாதிக்கப்பட்டேன் என எல்லோருக்கும் தெரியும்.

சட்டத்தை வளைத்து திட்டம் போடலாம், சட்ட விதிகளை வளைக்கலாம், ஆனாலும் தோல்வி அவர்களுக்கு தான். 8 தோல்வி 10 தோல்வி மட்டும் இல்லை இனி தொடர்ந்து தோல்வி தான் பெறுவார்கள். திராவிட சிந்தாந்த கொள்கைகளை கடைபிடிக்கும் தாய்கழகத்தில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன்.
இதனால், திராவிட சித்தாந்தம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்று, அந்தக் கட்சியில் ஒரு தொண்டனாக இணைந்துள்ளேன்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்து, தன்னையும் தன்னுடன் பயணித்தவர்களையும் அன்புடன் அரவணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

தந்தை பெரியாரின் சுயமரியாதை, பேரறிஞர் அண்ணாவின் அறிவு, முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் தமிழ்ப்பற்று மற்றும் அரசியல் ஞானம், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் விவேகம் ஆகிய பண்புகளை ஒருங்கே பெற்ற தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.
திமுகவுடன் நான் இணைந்தது சிலருக்கு வெறுப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இது எதிரணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலும் தடுத்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது

தேசியம் என்ற பெயரில் மதவாத அரசியல் தமிழ்நாட்டில் வெறும் பேச்சாகவே உள்ளது , இங்கு எப்போதும் திராவிடமே நம் உயிர் மூச்சு.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக முதலமைச்சருக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.














