`எடப்பாடி பாணியில் இன்னும் பல வேட்பாளர்கள்'- தவெக-வுக்கு ஷாக் கொடுக்கும் ப்ளானில...
நாமக்கல் மாவட்டம் தலைமலை சஞ்ஜீவிராயப் பெருமாள் கோயில் : திருப்பதிக்கு நிகரான திருத்தலம்!
திருப்பதிக்கு இணையான தலங்கள் பல நம் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் இயற்கை எழில் சூழ்ந்த மலையில் இருக்கும் அற்புதத்தலம்தான் தலைமலை.
இந்த மலை உச்சியில் கோயில் கொண்டு அருள்கிறார் சஞ்ஜீவிராய பெருமாள். இவரை வழிபட்டால் திருப்பதி சென்று வேங்கடவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புதமான தலம் குறித்து அறிந்துகொள்வோம்.
முசிறியிலிருந்து பவுத்திரம் செல்லும் பேருந்தில் ஏறி நீலியாம்பட்டியில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீ தொலைவு பயணித்தால் தலைமலையை அடையலாம்.

தொலைவிலிருந்து பார்க்கும்போது, சயன கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள்போலவே காட்சியளிக்கிறது, தலைமலை. எனவே மலை ஏறும் முன்பு மலைக்குக் கற்பூரம்காட்டி மானசீகமாக அனுமதி பெற்று, நல்லவிதமாகப் பயணித்துத் திரும்ப வேண்டிக்கொண்டு மலையேற்றத்தைத் தொடங்குகிறார்கள் பக்தர்கள்.
மலையேறத் தொடங்கியதும் சுகமான காற்று நம்மைத் தழுவும். வழி எங்கும் வித்தியாசமான பூச்சிகள் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கும். நாமும் அவற்றைத் தொடாமல் பயணிப்பது நல்லது. ஒரு கி.மீ மலையேறிய பின் கருப்பசாமி கோயிலை அடையலாம்.
மழைக்காலங்களில் இதில் பயணிக்கும்போதும் கூடுதல் கவனம் தேவை. சில நேரங்களில் பாறைகளில் நீர் வழியும் என்பதால் பாதை வழுக்கலாம். கருப்பசாமியை வழிபட்டுவிட்டு சிறு ஓய்வுக்குப் பின் மலையேறினால் `காத்தாடி மேடு' எனும் பகுதியை அடையலாம்.
பெயருக்கேற்றாற்போல் அந்தப் பகுதியில் வீசும் காற்று பக்தர்களின் களைப்பைப் போக்கும் விதத்தில் சுகம் தருகிறது. காற்றில் மூலிகைகளின் வாசம் வீசுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்பு கூட்டுப்பாதை வழியாக ‘முழங்கால் முடிச்சு’ என்னும் இடத்துக்கு வந்து சேரலாம்.

திருமலையில் காணப்படும் `முழங்கால் முறிச்சான்' பகுதியைப் போலவே, இந்த `முழங்கால் முடிச்சும்' செங்குத்தான மலையேற்றமாய்த் திகழ்கிறது. கடினமான அந்த மலையேற்றத்தின் முடிவில் கன்னிமார் சுனையை அடையலாம்.
கன்னிமார் சுனை, திருப்பதி திருமலையின் சுவாமி புஷ்கரணிக்கு இணையான தீர்த்தமாகக் கருதப்படுகிறது. கோடையிலும் வற்றாமல் தீர்த்தம் நிறைந்து காணப்படுகிறது. அருகிலிருக்கும் மூலிகைகளின் சாறுகள் கலப்பதால், இந்தத் தீர்த்தமே அருமருந்தாக விளங்குகிறது.
இந்தத் தலம் குறித்த புராணச் சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது. சனி பகவானின் அதிதேவதை யமன். ஒருமுறை யமனையும் சனி தோஷம் பிடித்ததாம். இதனால் அவர் தன் கடமைகளைச் செய்ய இயலாமல் தவித்தார். அப்போது, சனி தோஷம் நீக்கும் தலம் எது என்று அவர் தேவகுருவைக் கேட்டபோது, ‘தலைமலையில் இருக்கும் கன்னிமார் சுனையில் நீராடி, அங்கு சுயம்புவாய்த் தோன்றியிருக்கும் வேங்கடாசலபதியை வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்’ என்று அறிவுறுத்தினார். யமனும் அதன்படியே செய்ய, அவரைப் பீடித்திருந்த சனி தோஷம் விலகியது என்கிறார்கள் பக்தர்கள்.
அப்படிப்பட்ட மகிமையான பெருமாளின் சந்நிதியை அடைந்தால் தீப ஒளியில் மிளிரும் பெருமாளின் திருமேனியைத் தரிசனம் செய்யலாம். உள்ளே இரண்டு மூலவர்கள். ஒருவர் சுயம்புவாய் உதித்த மூர்த்தி. மற்றொருவர் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய்ப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மூர்த்தி.

சுயம்புமூர்த்தியின் காலம் மிகவும் பழைமையானது. இந்த மூலவருக்கு அபிஷேகங்கள் இல்லை. மற்றவருக்கே அனைத்து அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
மகாலட்சுமி தாயாருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. அன்னையின் தரிசனம் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது.
இந்தத் தலத்தில் ஒருமுறை மலையேறி வந்து வேண்டிக்கொண்டாலே துன்பங்கள் எல்லாம் நம்மைவிட்டு நீங்கிவிடும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள், பகைவர்களின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தங்களின் துயர் நீங்கப் பெறுவர். நன்மைகள் நிறைந்த வாழ்வைப் பெறுவ தோடு வாழ்க்கைக்குப்பின் பிறவிப் பிணியும் தீரும் என்கின்றனர் பக்தர்கள்.
இந்த மலையின் அற்புதம் உணர்ந்த மக்கள், இங்கு பௌர்ணமி தினங்களில் மலையடி வாரப் பகுதியில் உள்ள பாதையில் கிரிவலம் வருகிறார்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை தலைமலை சென்று சஞ்ஜீவராயபெருமாளை தரிசனம் செய்து வாருங்கள். வாழ்க்கை நலமாகும் வளமாகும்.




















