மும்பை: நடுக்கடலில் உள்ள ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் தீவிபத்து - 10 பேர் காயம்
கரூர் மாவட்டம், வெள்ளியணை ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள்: தங்க மோதிரம் தேள் ஆன அதிசயம்!
திருப்பதிக்கு நிகரான தலங்கள் அநேகம் தமிழகத்தில் உண்டு. அதை திருப்பதி பெருமாளே பலமுறை பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் திருப்பதி சென்ற பலனை அடைய விரும்புபவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கும் சில பெருமாள் ஆலயங்களில் வழிபட்டால் திருப்பதி சென்ற பலனை அடையமுடியும் என்பதைப் பல சம்பவங்களின் மூலம் பெருமாள் பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். அப்படி ஒரு பெருமாள்கோயில்தான் வெள்ளியணை ஸ்ரீ கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோயில். 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருக்கோயில், கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
முன்பு ஒரு காலத்தில், கரூர் பகுதியில் வசித்த சம்சாரி ஒருவர், விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாமல் அவதிப்பட்டார். "ஏழுமலையானே! விரலில் இருந்து மோதிரம் கழன்றுகொள்ள அருள்செய். இந்த மோதிரத்தை உனக்கே காணிக்கை ஆக்குகிறேன்’’ என்று பிரார்த்தித்துக்கொண்டார்.

பிரார்த்தனை பலித்தது. அன்றிரவே மோதிரம் தனியே கழன்று வந்தது. அந்தப் பக்தர், மோதிரத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து ஒரு நாள் திருப்பதிக்குக் குடும்பத்துடன் சென்றார். திருப்பதியில் தரிசனம் முடித்து, மோதிரத்தை உண்டியலில் சேர்ப்பதற்காக மஞ்சள் முடிப்பை அவிழ்த்தார். உள்ளே மோதிரத்துக்குப் பதிலாக சிறிய தேள் ஒன்று இருந்தது. பக்தர் அதிர்ந்துபோனார்.
"சுவாமி என்ன இது விபரீதம்’’ என்று அரற்றினார். அப்போது அசரீரியாக ஒலித்தது ஒரு குரல். `இது கரூர் வெள்ளியணையில் கோயில் கொண்டிருக்கும் என் சகோதரன் வெங்கட்ரமண பெருமாளுக்கு உரியது. அங்கே போய் காணிக்கை செலுத்து’ என்றது அசரீரி வாக்கு. பக்தர் மனம் மகிழ்ந்தார். புறப்பட்டு வெள்ளியணைக்கு வந்து மஞ்சள் முடிப்பை அவிழ்த்துப் பார்க்க உள்ளே தங்க மோதிரம் மின்னியது. பெருமாளின் திருவிளையாடலை பக்தர்கள் உணர்ந்துகொண்டதோடு வெங்கட் ரமண சுவாமியின் பெருமையையும் தெரிந்துகொண்டனர்.
பாண்டியர்கள் காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட இரும்பு முறுக்கி சாமைய நாயக்கரால் கட்டப்பட்டதாம் இந்த ஆலயம். அவர்கள் காலத்தில் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த புலி ஒன்று, மக்களையும் கால்நடைகளையும் தாக்கி அழித்து வந்தது. மக்கள் அந்தப் புலியை அழிக்கும்படி பாண்டிய மன்னரிடம் முறையிட்டனர். அவரும் எவ்வளவோ முயன்றும் புலியைக் கொல்ல முடியவில்லை. ஆகவே, `புலியைக் கொல்பவருக்குத் தக்க சன்மானமும் இந்தப் பகுதியின் குறுநில மன்னராகும் உரிமையும் வழங்கப்படும்’ என்று முரசறைந்து தகவல் தெரிவிக்கச் செய்தார் பாண்டிய மன்னர்.
இதைக் கேட்ட சாமைய நாயக்கர், தனியாளாகச் சென்று புலியை வேட்டையாடினார். இதை அறிந்த பாண்டிய மன்னன் அவரை அந்தப் பகுதிக்குச் சிற்றரசனாக்கினார். பக்தரான சாமைய நாயக்கர் தான் அன்றாடம் வழிபடும் வெங்கட் ரமண பெருமாளுக்கு வெள்ளியணையில் ஒரு கோயிலைக் கட்டினார். அதுவே இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

இக்கோயில் திருப்பதி போன்றே மணிமாட அமைப்பில் திகழ்கிறது. தரையில் இருந்து சுமார் 7 அடி உயரத்தில் கருவறை, பரிவார தெய்வங்களின் சந்நிதிகள் இருக்கும் வகையில் கட்டப்படுவதே மணிமாடக் கோயில் அமைப்பாகும்.
மட்டுமன்றி, கருவறைக்கு நேர் எதிரே கற்பூரம் ஏற்றுவதற்கேற்ற கம்பத்தடி, மூன்று நிலை ராஜகோபுரம், கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தால் அனுமன் உருவம் அமைந்த கம்பத்தடி, பலிபீடம், கருடன் சந்நிதி, துவாரபாலகர்கள், ஆஞ்சநேயர் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி, கருவறையில் பெருமாள் ஆகிய அனைத்து அமைப்புகளும் திருப்பதியில் உள்ளதுபோன்றே அமைத்துக் கட்டப்பட்டதாம் இந்தக் கோயில். தற்போது, மூன்று நிலைகளில் ராஜகோபுரம் இல்லை. புனரமைப்பின் போது இடிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
'இங்கே பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் திருப்பதிப் பெருமாளுக்குக் கேட்கும்; இங்கு செலுத்தும் காணிக்கை திருப்பதி பெருமாளின் திருவடியில் சேரும்’ என்பது நம்பிக்கை.
திருக்கோயிலுக்கு வெளியே கருவறைக்கு நேர் எதிரில் கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. தொடர்ந்து வெளியே உள்ள கம்பத்தடி, பிரதான வாயில், உள் கம்பத்தடி, மகா பலிபீடம், கருடக் கம்பம், கருடன் சந்நிதியை தரிசித்து வலம் வரலாம்.
தொடர்ந்து அனுமனை வழிபட்டுவிட்டு, கருவறைக்குச் செல்லலாம். கருவறைக்கு முன்பு உள்ள வாகன மண்டபத்திலும் தூண் சிற்பங்கள் நம் கருத்தைக் கவர்கின்றன. இந்த மண்டபத்திலேயே விஷ்வக்சேனர், கருடன், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், மற்றும் ராமாநுஜரை தரிசிக்கலாம்.

கருவறையில் ஶ்ரீதேவி-பூமாதேவி சமேதராக ஶ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் அருள்கிறார். `பெயருக்கேற்ப சகல கல்யாண வரங்களையும் அருளும் தெய்வம் இவர்' என்கிறார்கள் பக்தர்கள். திருவோண நட்சத்திர நாள்களில் பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறும். திருமண வரம் வேண்டும் அன்பர்கள் இந்த நாளில் பெருமாளுக்குத் தாமரை, துளசி சாத்திப் பெருமாளைச் சேவித்தால், அடுத்த மூன்று திருவோணத் துக்குள் திருமணம் கூடி வரும்.
மூல நட்சத்திர நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய் சமர்ப்பித்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும். குழந்தைகள் கல்வியில் மேன்மை அடைவார்கள்; தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை, தயிர்சாதம் சமர்ப்பித்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கருட பஞ்சமி அன்று இங்குள்ள கருடனை வழிபட்டால், நாகதோஷங்கள் நீங்கும்.
நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் இந்தக் கோயிலுக்குச் சென்று வாருங்கள்; சகல நன்மைகளும் உண்டாகும்.!


















