IPL 2026: "CSK-வை விட மும்பை அணி தான் சிறந்தது, ஏனென்றால்..!"- முன்னாள் வீரர் இர...
பள்ளி மாணவி கொலை வழக்கு: ஒரே ஸ்டைலில் கொலைகள் - குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாலை சுமார் 6 மணியளவில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மறுநாள் மதியம் சுமார் 2 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மாற்று சமூகத்தினரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் கூறியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவிலேயே மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவியைக் கொன்றது ஏன்? என, போலீஸாரிடம் அவர் கூறிய வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “கடந்த 2020-ம் ஆண்டு, பருத்திக் காட்டில் பருத்தி பறித்துக் கொண்டிருந்த பாப்பா என்ற 65 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரது நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
இந்த தண்டனையை மதுரை சிறையில் அனுபவித்தபோது, மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெளியே வந்துள்ளார். வழக்கினை நடத்த அவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக, அவரது தாய் லிங்கம்மாள் மற்றும் கீழஈராலில் தன்னுடன் தொடர்பில் இருந்த ஈஸ்வரி ஆகியோர் பணம் திரட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால், அந்த பணம் போதவில்லை. இதனால், மீண்டும் பெண்களிடம் நகைகளை பறிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக குளத்தூர் பகுதியிலுள்ள அவரது நண்பர்கள் சிலரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்து போடுவதற்காக சென்று விட்டு மதியம் 3.30 மணியளவில் மாணவி கொலை செய்யப்பட்ட காட்டுப்பகுதிக்கு வந்துள்ளார். அங்கு பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, செயின் பறிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு ஒதுங்குவதற்காக பெண்கள் வருகிறார்களா? எனப் பார்த்துள்ளார். மாலை 6.30 மணியளவில் மாணவி காட்டுப்பகுதிக்குள் செல்லவே, கட்டையால் மாணவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், மாணவி மயங்கி சரியவே அங்குள்ள சோளக்காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.
அப்போதுதான் மாணவியின் கழுத்தில் நகை ஏதும் அணியவில்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும், மாணவி உயிருக்குப் போராடிய நிலையிலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதிகாலை வரை மாணவியின் உடலின் அருகிலேயே இருந்துவிட்டு காலையில் மாணவியின் உடலை காட்டுப்பகுதிக்குள்ளேயே இழுத்துப் போட்டு சென்றுவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த வழக்கில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்தான் அவரது கையில் ஒரு சமுதாயத் தலைவரின் படத்தை பச்சை குத்தியிருப்பது தெரிய வந்தது.

இதனால், மாற்று சமூகத்தினரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கூறியதால்தான் பாதுகாப்பு கருதி மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். பெண்கள் தனியாக சிக்கினால் முதலில் கட்டையால் தலையில் ஓங்கி அடித்து மயக்கமடையச் செய்தபிறகு நகைகளை திருடுவதும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளான். அதே பாணியில்தான் பள்ளி மாணவியையும் தாக்கி, இப்படிச் செய்துள்ளான்” என்றனர்.




















