IPL 2026: "CSK-வை விட மும்பை அணி தான் சிறந்தது, ஏனென்றால்..!"- முன்னாள் வீரர் இர...
மகுடம் சூடா மன்னர்கள்: ஐபிஎல் வரலாற்றில் 'ஆரஞ்சு தொப்பி' வெல்லாத 6 ஜாம்பவான்கள்! - யார் தெரியுமா?
ஐபிஎல் என்றாலே சிக்ஸர்களும், சதங்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'ஆரஞ்சு தொப்பி', ஒரு பேட்டருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம். விராட் கோலி முதல் கிறிஸ் கெயில் வரை பல வீரர்கள் இதை வென்றுள்ளனர். ஆனால், ஐபிஎல் தொடரின் முகமாகவே கருதப்படும் 6 ஜாம்பவான்கள், பல ஆயிரம் ரன்களைக் குவித்தும் இந்த ஒரு விருதை மட்டும் இதுவரை வென்றதில்லை. அந்தப் பட்டியல் இங்கே...

ரோஹித் சர்மா
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பையை முத்தமிட்ட கேப்டன்! ரன் மெஷினாக 7,000 ரன்களைக் கடந்தவர். ஆனால், ஒவ்வொரு சீசனிலும் மற்றவர்கள் ஓடும் ரன் பந்தயத்தில் ரோஹித் ஒரு 'நிதானமான' ஆட்டத்தையே கடைப்பிடித்தார். 2013-ல் இவர் 538 ரன்கள் எடுத்தபோது, மைக் ஹசி 700 ரன்களுக்கு மேல் எடுத்து இவரை முந்திச் சென்றார். 'கோப்பை முக்கியம்' என நினைத்தாரோ என்னவோ, இந்த ஆரஞ்சு தொப்பி மட்டும் இவருக்கு இன்னும் கைகூடவில்லை!
எம்.எஸ். தோனி
தோனி ஏன் இதை வெல்லவில்லை என்பதற்குப் பின்னால் ஒரு லாஜிக் இருக்கிறது. அவர் ஒருபோதும் ரன்களுக்காக ஆடியதில்லை, வெற்றிக்காக மட்டுமே ஆடினார். எட்டாவது வரிசையில் இறங்கி வந்து 20 பந்துகளில் 50 ரன்கள் எடுக்கும் ஒருவரால், 600 ரன்களை ஒரு சீசனில் எடுப்பது கடினம். ஒருவேளை 'தல' தோனி ஆரம்பத்திலேயே களம் இறங்கியிருந்தால், இன்று பல ஆரஞ்சு தொப்பிகள் அவர் வீட்டில் இருந்திருக்கும்!

ஏபி டி வில்லியர்ஸ்
மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் டி வில்லியர்ஸ், ஆர்சிபி அணிக்காகப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டங்களை ஆடியுள்ளார். 2016-ஆம் ஆண்டு இவர் 687 ரன்களைக் குவித்தபோது, அந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வெல்ல இவருக்கு அதிக வாய்ப்பிருந்தது. ஆனால், அதே சீசனில் விராட் கோலி 973 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்ததால், டி வில்லியர்ஸால் அந்த விருதை வெல்ல முடியாமல் போனது.

சுரேஷ் ரெய்னா
ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்திலிருந்தே ஒவ்வொரு சீசனிலும் மிகத் துல்லியமாக 400 முதல் 500 ரன்களைக் குவிக்கும் திறன் படைத்தவர். இருப்பினும், கிறிஸ் கெயில் அல்லது டேவிட் வார்னர் போன்ற அதிரடி வீரர்கள் ஒரு சீசனில் 700+ ரன்களைக் கடந்துவிடும்போது, ரெய்னாவால் அந்த உச்சத்தைத் தொட முடியாமல் போனது.
ஷிகர் தவான்
ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர். 2020-ல் 618 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான தவான், 6,700-க்கும் மேற்பட்ட ரன்களுடன் ரன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். 2020 சீசனில் 618 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பிக்கு மிக அருகில் வந்தார். துரதிர்ஷ்டவசமாக, கே.எல். ராகுல் அந்த சீசனில் அவரை விட அதிக ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார்.

அஜின்க்யா ரஹானே
நேர்த்தியான பேட்டிங் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பெயர் பெற்ற ரஹானே, ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். 2012 சீசனில் 560 ரன்கள் எடுத்ததே இவரது மிகச்சிறந்த பங்களிப்பாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காகப் பல முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடியும், ஆரஞ்சு தொப்பி இவருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.





















