"ஒட்டுமொத்த நாடும் என்னை விமர்சித்துக் கொண்டிருந்தது, அந்த சமயத்தில் எனக்கு.!" -...
SKY: 'தோனி... ரோஹித்... சூர்யா!' - தடம்பதித்த கேப்டன்களின் வரிசையில் சூர்யகுமார்
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றிருக்கிறது. தோனி, ரோஹித் வரிசையில் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார். சூர்யாதான் இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.

வீரராக சூர்யா மீது அந்த விமர்சனம் இருக்கலாம். ஆனால், ஒரு கேப்டனாக சூர்யா இந்த உலகக்கோப்பையில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.
இந்த இறுதிப்போட்டியே பெரிய அழுத்தமிக்க போட்டி. சொந்த நாட்டில் எந்த அணியும் டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை, அகமதாபாத் இந்திய அணிக்கு ஒவ்வாத மைதானம் என எத்தனையோ நெகட்டிவான கருத்துகள் சுற்றியிருந்தது. அதையெல்லாம் கடந்துதான் இந்திய அணி வென்றிருக்கிறது. குறிப்பாக, இதே அகமதாபாத் மைதானத்தில் இதற்கு முன்பாக நடந்த 2023 ஓடிஐ உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது சூர்யாவின் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்திருந்தது. அந்தப் போட்டியில் பொறுப்பை ஏற்று பேட்டிங் ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய நேரத்தில் டெய்ல் எண்டர்களுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து சூர்யா சொதப்பியிருப்பார்.

இந்திய அணியின் உலகக்கோப்பை தோல்விக்கு மிக முக்கிய காரணமாக சூர்யா இருந்தார். மூன்றாண்டுகள் மீண்டும் அதே மைதானம்...அதே மாதிரியே சுற்றி 1 லட்சம் ரசிகர்கள்...அந்த ரசிகர்களை அமைதிப்படுத்துவேன் எனக் கூறிய எதிரணி கேப்டன். ஆனால், இந்த முறை ரிசல்ட் வேறாக இருந்திருக்கிறது. இந்திய அணியின் கையில் உலகக்கோப்பை இருக்கிறது. சூர்யா இந்திய அணியின் சரித்திரத்தில் இடம்பிடித்த கேப்டனாக இருக்கிறார்.
2024 டி20 உலகக்கோப்பையை வென்றவுடன், இந்திய அணியில் பெரிய மாற்றம் நடக்கிறது. கோலி, ரோஹித், ஜடேஜா போன்ற சீனியர்கள் ஒரேடியாக ஓய்வை அறிவிக்கிறார்கள். பயிற்சியாளர் மாறுகிறார். இந்திய அணி பெரும்பாலும் அனுபவமற்ற இளம் வீரர்களை கொண்ட அணியாக மாறுகிறது. அப்படிப்பட்ட அணிக்கு கேப்டனாக சூர்யா பொறுப்பேற்கிறார். ரோஹித் வென்று கொடுத்த கோப்பையை தக்க வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு. சூர்யா இந்த அணியை திறம்பட வழி நடத்தினார்.

அதற்கு சாட்சியாக இந்த உலகக்கோப்பையில் அவர் எடுத்த முக்கியமான சில முடிவுகளை கூறலாம். ஆரம்ப சில போட்டிகளில் அபிஷேக் திணறுகிறார் என்றவுடன், அவரை பென்ச்சில் வைத்துவிட்டு சாம்சனை லெவனில் எடுக்க வேண்டும் என பேசப்பட்டது. ஆனால், சூர்யா அபிஷேக்கை உட்கார வைக்காமலேயே சாம்சனை தேவைப்பட்ட சரியான சமயத்தில் லெவனுக்குள் கொண்டு வந்தார். இந்த மாற்றம் ஒர்க் அவுட் ஆனது. நாக் அவுட்களில் சாம்சன் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுத்தார்.
அதேமாதிரி, அரையிறுதுதியில் பெத்தேல் கதிகலங்க வைக்க போட்டியை இந்தியா வெல்ல சூர்யாவின் பௌலிங் ரொட்டேஷனும் முக்கிய காரணமாக இருந்தது. பும்ராவின் ஸ்பெல்லை சீக்கிரமாகவே முடிக்க வைத்து எக்கனாமிக்கலாக கட்டுப்படுத்தி, கடைசி ஓவரில் பெரிய டார்கெட்டை இங்கிலாந்துக்கு கொடுத்திருந்தார். அக்சர் படேல் கடைசி ஓவரை வீசுவார் என எதிர்பார்க்க, துபே கையில் பந்தை கொடுத்து அந்தப் போட்டியை வென்றிருப்பார். அதேமாதிரி, இறுதிப்போட்டியில் அபிஶேக்கை டிராப் செய்துவிட்டு ரிங்கு சிங்கை லெவனுக்குள் கொண்டு வர வேண்டுமென ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால், சூர்யா அபிஷேக்கை நம்பி வாய்ப்பு கொடுத்தார். அபிஷேக்கும் அந்த நம்பிக்கையை காப்பாற்றினார். பௌலிங்கின் போதுமே நியூசிலாந்து வீரர்கள் வேகப்பந்தை நன்றாக எதிர்கொள்கிறார்கள் என்பதால், திடீரென 3 வது ஓவரிலேயே அக்சரை அழைத்து வந்திருப்பார். அந்த மூவுக்கு பலனும் கிடைத்தது டிம் சீபர்ட் வீழ்ந்தார். இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. பும்ராவையும் கொஞ்சம் சீக்கிரமாக 4 வது ஓவரிலேயே கொண்டு வந்து ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை எடுக்க காரணமாக இருந்திருப்பார்.

ஒரு வீரராக சூர்யா இந்தத் தொடரில் சோபிக்காவிடிலும் கேப்டனாக முக்கியமான தருணங்களில் திறம்பட செயல்பட்டிருக்கிறார் என்பதை மறுக்கவே முடியாது. வாழ்த்துகள் சூர்யா!






















