Iran war: புதிய Supreme Leader - யார் இந்த Mojtaba Khamenei? | Decode | Middle E...
'இவன் பெயரே வரலாறு...' - நியூசிலாந்தை கதிகலங்க வைத்த சாம்சன்!
சாம்சன் என்றால் நிலையற்றத்தன்மை, சாம்சன் என்றால் கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர். இப்படித்தான் இத்தனை நாளும் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை . சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் பெயரை வலுவாக பதித்திருக்கிறார். உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உச்சத்தில் ஏற்றி வைக்கும் வகையில் ஒரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார்.

இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 தொடரில் ஆடியிருந்தது. அந்தத் தொடரின் 5 போட்டிகளிலும் சேர்த்தே சாம்சன் 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆகியிருந்தார். சாம்சன் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தது.
விளைவாக, இந்த உலகக்கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் அவர் லெவனிலேயே இல்லை. பென்ச்சில்தான் உட்கார்ந்திருந்தார். அவர் முதல் ஆப்சனாக பார்க்கப்படவே இல்லை. தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்திருந்தனர்.
சரியான சமயத்தில் சாம்சனின் தேவையும் ஏற்பட்டது. இந்திய அணியின் டாப் ஆர்டர் ஸ்பின்னர்களால் நிறைந்திருப்பதால் எதிரணிகள் மிக எளிதாக ஆப் ஸ்பின்னர்களை வைத்து கட்டம் கட்டினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியும் அடைந்திருந்தது. அதன்பிறகுதான் ஒரு வலது கை வீரர் வேண்டுமென சாம்சனை லெவனுக்குள் கொண்டு வந்தார்கள்.

சூப்பர் 8 இல் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக அது கிட்டத்தட்ட காலிறுதிப் போட்டி மாதிரி. தோற்றால் இந்திய அணி வெளியே செல்லும். அந்தப் போட்டியில் நின்று 97 ரன்களை அடித்து போட்டியை முடித்துக் கொடுத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதி. அதுவும் அழுத்தமிக்க போட்டி. அந்தப் போட்டியிலும் அதிரடியாக ஆடி 89 ரன்களை அடித்து இந்திய அணி 250 + ரன்களை எடுக்க காரணமாக இருந்தார்.
இதோ இப்போது இறுதிப்போட்டி. சாம்சன் தொடர்ச்சியாக சொதப்பி அணியிலிருந்து டிராப் ஆக காரணமாக இருந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் முதல் 4 பந்துகளை பார்த்து டிபன்ஸ் ஆடியிருந்தார். 5 வது பந்தை லாங் ஆனின் தலைக்கு மேல் அடித்து சிக்சராக்கியிருப்பார். அவ்வளவுதான், அதற்கு மேல் அவர் அவுட் ஆகும் வரை எந்தத் தடையும் இல்லை. சாம்சனின் இருத்தல் அபிஷேக்குக்கும் உதவியாக இருந்தது. சாம்சன் க்ரீஸில் இருந்ததால் ஸ்பின்னரான க்ளென் பிலிப்ஸை ஒரே ஓவரோடு கட் செய்தார் சாண்டனர். இது அபிஷேக்குக்கு பேருதவியாக இருந்தது.

பவர்ப்ளேயை அபிஷேக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். அவர் அவுட் ஆன பிறகு மிடில் ஓவர்களில் இஷான் கிஷனோடு சேர்ந்து அதிரடியை தொடங்கினார் சாம்சன். அவரின் அதிரடிக்கு நியூசிலாந்து வீரர்களிடம் எந்த பதிலும் இல்லை. 16 வது ஓவரில் நீஸமின் பந்தில் 89 ரன்களில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
சாம்சன் நினைத்திருந்தால் கடைசி வரை நின்று சௌகரியமாக சதத்தை எட்டியிருக்க முடியும். ஆனால், அணியின் நலன்தான் அவருக்கு பிரதானம். அதனால்தான் அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ரிஸ்க் எடுத்து ஆடினார். சாம்சன் அடித்த இந்த 89 ரன்கள்தான் டி20 உலகக்கோப்பையில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். சாம்சனை இனியும் இரண்டாம்பட்சமாக அணி நிர்வாகம் அணுக முடியாது.




















