தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! ...
யானை - மனித எதிர்கொள்ளல்: வீட்டுக்கு சென்ற வழியில் சிக்கிய நண்பர்கள் - இருவரும் உயிரிழந்த சோகம்
இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முக்கிய இடத்தில் இருக்கிறது. குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை - மனித எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. யானைகளின் இடப்பெயர்ச்சி பருவம் நடைபெற்று வரும் நிலையில் பசுந்தாவரங்கள், நீர்நிலைகள், இணைகளைத் தேடி யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை பகுதியில் நேற்றிரவு யானை தாக்கியதில் இரண்டு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வனத்துறையின் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற இறப்புகள் தொடர்கதையாகி வருவதாக உள்ளூர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர், " காரக்கொல்லி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ரவி, லிங்கராஜ் ஆகிய இருவரும் தேவர்சோலை பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் நடந்து செல்லும் வழியில் எதிர்ப்பட்ட யானை இரண்டு நபர்களையும் தாக்கியிருக்கிறது. படுகாயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

இந்த துயரம் குறித்து உள்ளூர் மக்கள், " இந்த பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை 3 மணிக்கெல்லாம் யானை நடமாட்டம் இருக்கிறது. வனத்துறையிடம் தகவல் தெரிவித்தும் அலட்சியமாக இருந்தார்கள். அதனால்தான் இந்த மாதிரியான துயரம் நடந்திருக்கிறது. எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு யானைகளிடம் இருந்து நிரந்தரமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.

















