பிரிட்டன்: ஸ்டார்மர் அதிரடி ராஜினாமா... அடுத்த பிரதமராகப் போகிறாரா ஆண்டி பர்ன்ஹாம்? யார் இவர்?!
பிரிட்டன் அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், லேபர் கட்சியின் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.
பிரிட்டன் அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ள இந்த முடிவைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் அடுத்த தலைவராகவும், பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
யார் இந்த ஆண்டி பர்ன்ஹாம்?
வடமேற்கு இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 1970-ல் பிறந்து வளர்ந்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று, தனது 15 வயதிலேயே லேபர் கட்சியில் இணைந்தவர் ஆவார்.
2001-ல் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான இவர், தொடர்ந்து டோனி பிளேயர் மற்றும் கார்டன் பிரவுன் அமைச்சரவைகளில் உள்துறை, நிதித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகிய முக்கிய அமைச்சகங்களில் மூத்த பொறுப்புகளை வகித்தார்.
பின்னர் 2008-ல் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும், 2009-ல் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையை (NHS) நிர்வகிக்கும் சுகாதாரத் துறை அமைச்சராகவும் உயர்ந்தார்.

2017 முதல் 'கிரேட்டர் மான்செஸ்டர்' பகுதியின் மேயராகப் பணியாற்றியபோது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராந்திய மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி, பிரிட்டன் மத்திய அரசுக்கு இவர் மேற்கொண்ட சமரசமற்ற போராட்டங்களினால் "கிங் ஆஃப் தி நார்த் (King of the North)" என்று பரவலாக அறியப்பட்டார்.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 55% வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பியுள்ள ஆண்டி, இதற்கு முன்னர் 2010-ல் எட் மிலிபாந்திடமும், 2015-ல் ஜெரெமி கார்பினிடமும் லேபர் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
எனினும், தனது தொடர் அரசியல் போராட்டங்கள் மூலம் தற்போது பிரிட்டனின் அடுத்த பிரதமர் நாற்காலியைக் கைப்பற்றுவார் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.















