VBGRAMG திட்டத்துக்கு ஒப்புதல்: `வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? தருகிற நிதியையும...
புதுக்கோட்டை, அறந்தாங்கி ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில்: மாவிளக்கு ஏற்றினால் மங்கலம் பெருகும்!
அன்னை பராசக்தி கோயில்கொள்ளாத ஊர் என்று ஒன்று தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். மாரியம்மனாக காளியம்மனாக, பொன்னியம்மனாக, கங்கையம்மனாக, பேச்சியம்மனாக இன்னும் பல்வேறு நாமங்களுடன் அவள் கோயில் கொண்டு அருளும் திருத்தலங்கள் ஏராளம். பொதுவாகவே ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அம்மன் தலங்களை முறையாக வழிபட்டால் மழைவளம் சிறக்கும். விவசாயம் தளைத்தோங்கும். நோய் நொடிகள் வாராது. அப்படி அருள்தரும் ஓர் அம்பிகையாகப் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீவீரகாளியம்மன்.

முன் ஒருகாலத்தில், காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி எனும் கிராம மக்களால் வழிபட்டவளாம் இந்த ஸ்ரீவீரமாகாளியம்மன். பிறகு, தற்போதைய கோயில் இருக்கும் இடமான அறந்தாங்கியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள மூக்குடி கிராமத்தில் எழுந்தருளினாள் என்கிறது ஸ்தல வரலாறு.
தற்போது இருக்கும் இந்த ஆலயம் 300 ஆண்டுகள் பழைமையான கட்டுமானம் என்றாலும் ஆலயத்தின் தொன்மையோ மகாபாரத காலம் வரை செல்கிறது. மகாபாரதத்தில் வனவாசத்தின்போது, வீரவனம் என்று அழைக்கப்பட்டதாம் அறந்தாங்கிப் பகுதி. இங்கு பஞ்சபாண்டவர்கள் வந்ததாகவும், அப்போது இந்த அம்மனை தரிசித்து வணங்கித் தாங்கள் தங்க அனுமதி தரவேண்டும் என்று வேண்டியதாகவும் அதற்கு அன்னை மகிழ்ந்து அவர்கள் தங்குவதற்கு நல்ல இடத்தை அம்மன் காட்டி அருளியதாகவும் சொல்வர்.
வசந்த மண்டபம், மகா மண்டபம் என பிரமாண்டமாகத் திகழ்கிறது, ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில். திருமுடியில் பாம்பை ஆபரணமாகக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறாள் அன்னை. செவியில், சிவனாருக்கு உரிய அணிகலனை அணிந்திருக்கும் அழகே அழகு!

தன்னை நாடி வருவோரின் துயர் துடைக்க, அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறாள் ஸ்ரீவீரமாகாளியம்மன். சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி, கருணையே உருவெனக் கொண்டு காட்சி தரும் அன்னையை வணங்கினால், வீட்டில் சுபகாரியங்கள் நிகழும் என்பது ஐதிகம்.
சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகையில் தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசி மகம் மற்றும் சிவராத்திரி என வருடம் முழுவதும் இங்கு திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை.
ஆடிப் பெருந்திருவிழா, இங்கு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனி மாத நிறைவில் அல்லது ஆடித் தொடக்கத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அதையடுத்து வருகிற செவ்வாய்க் கிழமையில், காப்புக் கட்டித் திருவிழா துவங்கும். 18 நாள்கள் நடைபெறும் விழாவில், தினமும் அம்மன் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். விழாவின் நிறைவில், தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது.
ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீவீரமாகாளியம்மனை வேண்டினால், வாழ்வில் வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

சாதாரணப் பொட்டு அல்லது தங்கம் - வெள்ளியில் பொட்டு செய்து சமர்ப்பித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்; மாவிளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும். இவ்வாறு அன்னைக்கு மாவிளக்கு சமர்ப்பித்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் அநேகர். இதற்கு சாட்சி இங்கு குவியும் பக்தர்கள்.
கோயிலின் முன்னே ஸ்ரீவிநாயகர் சந்நிதியும், ஸ்ரீகருப்பர் சந்நிதியும் உள்ளன. இவர்களை வேண்டியபடி வந்து, அம்மனை மனதாரப் பிரார்த்தித்தால், நம்மை மனமுவந்து அருள்பாலித்து அருள்வாள் அன்னை. அறந்தாங்கி செல்பவர்கள் தவறாமல் ஸ்ரீவீரகாளியம்மனையும் தரிசித்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.




















