திருச்சி: கிரெடிட் கார்டு புதுப்பிப்பதாகக் கூறி ரூ. 1 லட்சம் மோசடி; மர்ம ஆசாமிக்...
புதுக்கோட்டை மாவட்டம், காளப்பனூர் முத்துமாரியம்மன்: பேசாத குழந்தைகளைப் பேசவைக்கும் தாய்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள காளப்பனூர். இங்குதான் அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. 200 ஆண்டுகள் பழைமையான இந்த முத்துமாரியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றத்து.
அருகில் உள்ள ஊரான விராலூரில் குறும்பச்சி அம்மன் என்னும் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களில் இருக்கும் அம்மனையும் சகோதரிகள் என்றே அழைக்கிறார்கள்.
குறும்பச்சியம்மனுக்கு 7 குழந்தைகளாம். முத்துமாரியம்மனுக்குக் குழந்தை இல்லை என்பது ஐதிகம். எனவே ஊரில் உள்ள பிள்ளைகளை எல்லாம் தன் பிள்ளையாகப் பாவித்து அருள்வாளாம் இந்தத் தாய்.

இந்த அம்மன் கோயில் கருவறையில், ஆரம்பத்தில் புற்றுமண்ணால் பிடித்து செய்யப் பட்ட சிலைதான் இருந்துள்ளது. பிற்காலத்தில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் குடமுழுக்கு விழாவின்போதுதான்... பழைய புற்றுமண் சிலையோடு, கல்லாலான புதிய அம்மன் சிலையையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
கோயில் காம்பவுண்டுக்கு வெளியே வலது புறம் தனி சந்நிதியில் செல்வவிநாயகர் வீற்றிருக்கிறார். கோயில் பிரகாரத்துக்குள் கருவறைக்கு இடதுபக்க மூலையில் ஆண், பெண் முனிகள் அமர்ந்திருக்கிறார்கள். மண்சிலைகளாக இருந்த இந்தச் சிலைகளை, குடமுழுக்கின் போது சிமென்ட் சிலைகளாக மாற்றி அமைத்துள்ளார்கள்.
இங்கே, மாசி முதல் சித்திரை மாதம் வரையிலான காலத்தில், இடைப்பட்ட ஏதோவொரு 22 நாள்களில் திருவிழா நடக்கும். அதுவும் கோயிலில் பல்லி சகுனம் கொடுத்தால் மட்டுமே திருவிழா. மாசி 15-ம் தேதிக்கு மேல், சித்திரை மாதம் கடைசி வரையிலுமான காலத்தில்... வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும், காலையில் 5 முதல் 6:30 மணி வரைக்கும், மாலையில் 5 முதல் 7 மணி வரைக்கும் சகுனம் பார்க்கிறார்கள்.
சகுனம் கிடைக்கவில்லை என்றால், அந்த வருடம் திருவிழா கிடையாது. அப்படிச் சகுனம் கிடைக்காமல், பத்து வருடங்கள் தொடர்ச்சியாக திருவிழா நடத்தாமல் இருந்ததும் உண்டு.
திருவிழா தொடர்ச்சியாக நடக்காமல் இருக்கும் காலத்தில், சாமி குறி கேட்டு, ஸ்ரீங்கம் அம்மா மடத்துக்குப் போய் காவிரி தீர்த்தத்தை எடுத்து வந்து, கோயில் பிராகாரத்தில் தெளிக்கிறார்கள்.
மாறாக, திருவிழா நடத்த சகுனம் கிடைத்துவிட்டால், ஞாயிற்றுக் கிழமை காப்புக் கட்டித் திருவிழாவைத் தொடங்கி அதிலிருந்து 22 நாள்கள் களைகட்டும்.

18-ம் நாள் மண்டகப்படியின்போது, கோயிலுக்கு முன்பு உள்ள நான்கு கல் கால்களில், தேர்ச் சட்டம் தூக்கிப்போடும் நிகழ்வும் நடைபெறும். அதாவது, தேர் போன்ற அமைப்புக்கான மரச்சட்டங்களை இணைத்துத் தேராக்கி, அதைத் தூக்கி அந்த நான்கு கல் கால்களிலும் பொருத்துவார்கள்.
அந்த வைபவத்துக்குப் பிறகு, பக்தர்கள் அந்த நான்கு கல் கால்களிலும் மண் அள்ளிப் போட்டு வேண்டிக்கொள்வார்கள். அப்படி வேண்டிக்கொண்டால், அவர்களின் பேசாத குழந்தைகளுக்கு அம்மன் பேசும் வரத்தை வழங்குவாள் என்பது நம்பிக்கை. திருவிழா முடியும்வரை இப்படி மண் அள்ளிப் போட்டு வேண்டிக்கொள்வார்கள்.
திருவிழா முடிந்த அடுத்த 8-ம் நாள் இந்தத் தேர்ச்சட்டத்தைச் கழற்றி எடுத்துவிடுவர். 21-ம் நாளன்று காலையில் காளப்பனுர் பெண்கள் பானைகள் வைத்துப் பொங்கலிட்டு, அம்மனுக்குப் படைப்பார்கள். 22-ம் நாளன்று காலையில் இருந்து, மற்ற நான்கு ஊர் மக்களும் பொங்கல் வைத்துப் படையல் போடுவார்கள்.
22-ம் நாளன்று படுகளம் நிகழ்வும் நடக்கும். குச்சி மாதிரி காளி உருவத்தைக் கொண்டு கோயிலைச் சுற்றி வலமும் குதிரை எடுப்பு நிகழ்வும் நடைபெறும்.
நாடகம் போடுவது இக்கோயிலின் தனிச் சிறப்பு. 21-ம் நாளன்று ஊர் மக்களின் சார்பில் பொதுவாக ஒரு நாடகம் போட வேண்டும். அப்போதுதான், அம்மன் மனம் குளிரும் என்பது ஐதிகம். பக்தர்கள் சிலர், தனிப்பட்ட முறையிலும் நாடகம் போடுவதாக வேண்டிக் கொள்வார்கள். அப்படியான நாடகங்களை திருவிழா முடிந்த 8-ம் நாளுக்குப் பிறகுதான் போட வேண்டும்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல கால்நடைகளின் உடல்நலப் பிரச்னையையும் தீர்ப்பாள் இந்தத் தாய். திருமண பாக்கியம், குழந்தை வரம் அருள்வாள். பெண்களின் தாலிப்பாக்கியம் காப்பதில் முதன்மையானவள் இந்த அம்மன்.அப்படி, தங்களது தாலி பாக்கியத்தைக் காத்த அம்மனுக்காக தங்கத்தாலியை நேர்த்திக் கடனாகச் செலுத்துவார்கள் பெண்கள் என்கிறார்கள் பக்தர்கள்.





















