சென்னை: மாணவியின் பாலியல் புகார்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைத...
பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! - நிலவரம் என்ன?
தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பெரம்பூர் தொடங்கி விருகம்பாக்கம் வரைக்கும் 5 பாயின்ட்டுகளில் விஜய்யின் பிரசாரத்திற்கு தவெக திட்டமிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தின் செயலியிலும் நேரிலும் அனுமதிக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
தவெகவின் கோரிக்கையை தொடர்ந்து விஜய் பேசும் முதல் பாயின்ட்டான பெரம்பூர் எம்.கே.பி நகர் பஸ் டெப்போ அருகே தொகுதியின் தேர்தல் அலுவலரும் காவல்துறையினரும் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்தப் பகுதி 3000 பேர் கூடுமளவுக்கான இடம் இல்லை எனக் கூறி காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளர் சிவா, செங்கோட்டையன் போன்றோர் தேனாம்பேட்டை தவெக வார் ரூம் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுசம்பந்தமாக தலைமைச் செயலகத்துக்குச் சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிடவிருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர்.
தவெக நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், 'நாங்கள் கேட்கும் பகுதி விசாலமாக 5000 பேர்கூட கூடுமளவுக்கான பகுதிதான். ஆனால், காவல்துறையினர் சம்பந்தமே இல்லாமல் அருகிலுள்ள வேறு இடத்தை காட்டி கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கின்றனர். காவல்துறையினரின் முறையற்ற போக்கை கண்டித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரளிக்க உள்ளோம்' என்றனர்.













