சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம்... 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் ரீ-கிரியேட் செ...
‘மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளலாமா? அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – வானதி காட்டம்
பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ் படித்தவர்களுக்கு 'அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி' தெரியாது என்ற அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ராஜேந்திரன் பேசும்போது, “நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழில் பிழையின்றிப் பேச வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், ’எனக்கு மொழி, அன்பு மொழி, அமைதி மொழி. இரக்கத்தின் மொழியை கிறிஸ்தவம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. எவ்வளவுதான் தமிழ் படித்தாலும், பலருக்கும் இது தெரியாது. கிறிஸ்தவ மதத்தில் பிறந்த நான், இதையெல்லாம் பைபிளில் படித்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
அமைச்சர் கிறிஸ்தவ மதத்தின் சிறப்புகளைப் பற்றிப் பேசட்டும். அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், தாய்த் தமிழில் பிழையின்றிப் பேச வேண்டும் என்று கேட்டால், அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்வது திசைதிருப்பும் செயலாகும்.

அதுமட்டுமல்லாமல், போகிற போக்கில், தமிழ் படித்தவர்களுக்கு அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி தெரியாது என்றும் கூறியிருக்கிறார். தமிழுக்கு நேர்ந்த இந்த அவமானத்தை சட்டமன்றத்தில் இருந்த மற்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தது வேதனை அளிக்கிறது. உலகப் பொதுமறையான திருக்குறள் அன்பு, அமைதி, இரக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பேசவில்லையா? “அன்பே சிவம்” என்று கூறிய திருமந்திரம், தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பக்தி இலக்கியங்கள் அன்பையும், அமைதியையும், இரக்கத்தையும் தானே போதிக்கின்றன?
‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் உயரிய கருத்து, தமிழின் ஆகப்பெரும் சிறப்புகளில் ஒன்றாகும். எனவே, அன்பு, அமைதி, இரக்கம் குறித்து அமைச்சர் மரிய வில்சன் தமிழர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். தமிழை அவமானப்படுத்திய அமைச்சர் மரிய வில்சன், தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ‘பிழையின்றித் தமிழில் பேசுங்கள்’ என்று கேட்டதற்கு, ’அப்படித்தான் பேசுவேன்’ என்று கூறிய அமைச்சர் மரிய வில்சனை, முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.















