"பாகிஸ்தானில் 'இந்த' அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா மீது போர் தொடுப்போம்" - பாக...
மதுரை கூடலழகர் கோயில்: நினைத்த காரியத்தை முடிக்க அருளும் வியூக சுந்தரராஜ பெருமாள்!
மதுரை என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலும் அழகர்கோயிலும்தான். ஆனால் மதுரையின் நடுவே சிங்காரமாக அமர்ந்திருக்கும் ஓர் ஆலயம். அழகர்மலையில் இருப்பவர் கள்ளழகர் என்றால் இவர் கூடல் அழகர். மதுரைக்கே அடையாளமான அழகர். மதுரைக்கு கூடல் மாநகர் என்கிற பெயர் உண்டு. அப்படிப்பட்ட கூடல்மாநகரில் கோயில் கொண்டிருக்கிறார் இந்த கூடலழகர். வாருங்கள் அந்தக் கோயில் குறித்த சில அற்புதங்களை தரிசிப்போம்.
ஒருமுறை மதுரையை வெள்ளம் சூழ்ந்தது. பெருமாள் அந்த நகரைக் காக்கத் திருவுளம் கொண்டு சில மேகங்களை ஏவ அவையே நான்கு மாடங்களாக மாறி மதுரையைக் காத்தது. இதனால் நான்மாடக் கூடல் என்றும் கூடல் நகர் என்றும் இந்த ஊருக்குப் பெயர் உண்டானது. மேகங்களை ஏவிய பெருமாள் கூடலழகர் என்றானார்.

பிரம்மனின் மகன் சனத்குமாரர், திருமாலை அர்ச்சாவதார அதாவது சிலை வடிவில் தரிசிக்க வேண்டும் என விருப்பம் கொண்டார். அவர் மண்ணுலகம் வந்து கிருதமால் நதிக்கரையில் பெருமாளை நோக்கி தவமிருந்தார். அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அவருக்குக் காட்சி அளித்தார். உடனே சிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து, பெருமாள் அளித்த திருக்காட்சியை அப்படியே வடிவமைத்து, அதை அஷ்டாங்க விமானத்தின் கீழ் வைத்து பிரதிஷ்டை செய்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிராகாரங்கள், அநேக சந்நிதிகள், மூன்று தளங்கள், ஐந்து சிகரங்கள், அமர்ந்த, நின்ற, சயனித்த கோலத்தில் மூன்று பெருமாள்கள் என அமைந்த பிரமாண்ட ஆலயம் இது.
இருந்தையூர் செல்வன், பல்லாண்டு நாயகர் என்றும் திருநாமங்கள் கூடலழகருக்கு உண்டு. பெரியாழ்வார் இவரைப் 'பல்லாண்டு வாழ்க' என்று வாழ்த்திப் பாடினார். பாண்டிய மன்னன் வல்லப தேவனின் சந்தேகத்தை நீக்கி ‘திருமாலே பரம்பொருள்’ என்று மெய்ப்பித்து பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்த இடம் மெய்காட்டும் பொட்டல் என்றானது.
மார்கழி மாத பகல் பத்து முதல் நாளில் கூடலழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மேங்காட்டுப் பொட்டலுக்கு வந்து பக்தர்களுக்கு அருள்கிறார். கருவறைக்கு மேலே சுமார் 125 அடி உயரம் கொண்ட அஷ்டாங்க விமானம் உள்ளது. அதன் தரைத்தளத்தில் பூதேவி ஸ்ரீதேவி சமேதராக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார், பெருமாள்.
முதல் தளத்தில் பெருமாள் சூரிய நாராயணனாக நிற்கும் கோலத்திலும் இரண்டாம் தளத்தில் பெருமாள் க்ஷீராப்தி நாதனாக சயன கோலத்திலும் அருள்கிறார். சயனித்திருக்கும் பெருமாளுக்கு அந்தர வானத்துப் பெருமாள் என்று பெயர். இவரையே பெரியாழ்வார் தரிசித்துப் பல்லாண்டு பாடினார் என்கிறது தல புராணம். இரண்டு தளத்திலும் கருவறையைச் சுற்றி சிறிய பிராகாரமும் உள்ளது. கோயிலின் நடுமண்டபத்தில் கருடன், அனுமன், சேனை முதலியார், ராமர், கிருஷ்ணர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் துவரைக் கோமான் என்ற புலவராக இப்பெருமாளே வீற்றிருந்திருந்ததாகப் பரிபாடல் சொல்கிறது. இங்குள்ள தாயார் மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி எனப்படுகிறார்கள். உற்சவர் வியூக சுந்தரராஜப்பெருமாள். எந்தச் செயலையும் தொடங்கும் முன்பு இவரை வழிபட்டு வேண்டிக்கொண்டால் அதை சரியான வியூகத்தில் செயல்படுத்தி நமக்கு வெற்றியை அளிப்பார் என்பது நம்பிக்கை. மதுரை கூடலழகர், மதுரை கள்ளழகர், திருச்சி அன்பில் அழகர் என மூன்று அழகர்களில் காலத்தால் மூத்தவர் இந்தக் கூடலழகர் எனப்படுகிறார்.
இங்கு வழிபட்டால் மனக்கசப்புகள் தீர்ந்து மனநிம்மதியும் சந்தோஷமும் கூடும் என்பதும் இந்தக் கோயிலின் விசேஷங்கள் என்கிறார்கள். கிருதமாலா நதி, ஹேமபுஷ்கரிணி என்பவை இத்தலத் தீர்த்தங்கள். கிருதமாலா நதி முன்பு இக்கோயிலை மாலை போலச் சுற்றிக் கொண்டு கூடி ஓடியதால் இக்கோயில் கூடல் என்றும் பெருமாள் கூடலழகர் என்றானதாகவும் தகவல் உண்டு. அதிசயத்திலும் அதிசயமாக இந்த வைணவக் கோயிலில் நவகிரக சந்நிதி உள்ளது.
இங்குள்ள ஓவியங்களும் சிற்பங்களும் சிறப்பானவை. விமானத்தில் உள்ள சாளரங்கள் மற்றும் சிற்பப் படைப்புகள் வியப்பானவை. மதுரவல்லித் தாயார் சந்நிதியிலுள்ள கற்றூண்களும், இசைத் தூண்களும் கலை ரசிகர்களுக்கு உவப்பானவை எனலாம்.

இந்தக் கூடலழகப் பெருமாளின் மகிமைகளை பிரம்மாண்ட புராணத்தின் கதலீவன க்ஷேத்திர மகாத்மிய காண்டம், 12 அத்தியாயங் களில் விவரிக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைந்திருக்கும் இந்த விமானத்தை வலம் வந்து கூடலழகரை வழிபட அனைத்துத் தீமைகளும் நீங்கி நன்மைகள் மேலோங்கும் என்கின்றன புராணங்கள். மேலும், வைகுண்டத்தில் அருளும் திருக்கோலத்திலேயே கூடலழகர் இங்கே பரமபதத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அருள்புரிவதால், இந்தத் தலத்தை தரிசித்தால், வைகுண்டத்தை தரிசித்த பலன் கிடைக்குமாம். இதனால் முக்தியும் மோட்சமும் நிச்சயம் என்கிறார்கள்.
திருமண வரம், குழந்தைப்பேறு, கல்வி மேன்மை, மனநிம்மதி ஆகியவை நிறைவேற இங்கு தாயாருக்குப் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் உள்ளது. வாய்ப்பிருப்பவர்கள் மதுரை செல்லும்போது ஒருமுறை கூடலழகரை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும். நலமாகும்.



















