வார ராசிபலன் | 24.8.26 முதல் 30.8.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் ...
"ரூ.15,000 எப்படி பத்தும்?" - வாக்குறுதியை நிறைவேற்றுமா தவெக? பரிதாப நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள்
"பதினஞ்சாயிரம் சம்பளத்தை வச்சு இந்தக் காலத்துல எப்படி சார் குடும்பம் நடத்த முடியும்?" என்று கேட்கிறார்கள் பகுதிநேர ஆசிரியர்கள்.

உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பாடங்களைக் கற்பிக்க கடந்த 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16,500 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதில் 12 ஆயிரம் பேர், ரூ 15 ஆயிரம் சம்பளத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்கள்.
'பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு வாக்குறுதியை நிறைவேற்றாத அ.தி.மு.க, தி.மு.க-வைப் போலவே த.வெ.க-வும் எங்களை அலட்சியப்படுத்துகிறது' என்று குற்றம்சாட்டும் பகுதிநேர ஆசிரியர்களிடம் பேசினோம்.

"குறைந்த ஊதியமாக இருந்தாலும் பரவாயில்லை என்று கடந்த 2011- 2012 கல்வி ஆண்டில் ரூ. 5000 தொகுப்பூதியத்தில் சேர்ந்தோம். அரசுத்துறையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களை நிரந்தர ஊழியர்களாக்கியதுபோல், எங்களையும் நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பார்கள் என்று நம்பி பணியாற்றி வந்தோம். ஆனால், ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, அதற்கு பின் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் சரி, எந்த முன்னெடுப்பும் இல்லை.
2021- தேர்தலில் வாக்குறுதி அளித்த தி.மு.க-வும் ஆட்சிக்கு வந்தபின்பு எதுவும் செய்யவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் மாத ஊதியம் ரூ 15,000-த்திற்கு வந்துள்ளது.
இப்போதுள்ள விலைவாசியில் இந்த ஊதியத்தை வைத்து எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? எங்களுக்கு வேறு வேலையும் தெரியாது, தற்போது த.வெ.க ஆட்சியிலாவது எங்களுக்கு நல்ல காலம் பிறக்காதா என்று காத்திருக்கிறோம்" என்றனர்.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமாரிடம் பேசியபோது, ''5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவதோடு தற்காலிகமாகப் பணிபுரிந்த காலத்திற்கு, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் பெற்றுத் தரப்படும் என்று த.வெ.க-வின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.
2011-2012-ல் நியமிக்கப்பட்ட 16,549 பகுதிநேர ஆசிரியர்களில் பலர் மரணம் அடைந்ததாலும், ஓய்வு பெற்றதாலும் தற்போது 11,773 பேர் பணியாற்றி வருகிறோம். பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நாங்கள் வைத்த கோரிக்கைக்கு யானைப்பசிக்கு சோளப்பொறிபோல 2014-ல் ரூ 2000, 2017-ல் ரூ 700, 2021-ல் ரூ 2,300 எனக் கூடுதலாக்கி ரூ 10,000 வழங்கப்பட்டது.

பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து 2024-ல் ரூ. 2500-ம், 2026-ல் ரூ. 2500 என 2026 ஜனவரியிலிருந்து ரூ. 15,000 வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்குச் சேர்ந்தது முதல் மே மாதத்திற்கான ஊதியம் தந்ததில்லை, நடப்பு ஆண்டில்தான் மே மாதம் சிறப்பு உதவித்தொகை என ரூ. 10,000 வழங்கப்பட்டது.
15 ஆண்டுகளைக் கடந்த பிறகுதான் எங்கள் ஊதியம் ரூ. 15,000-த்திற்கு வந்துள்ளது. அதேநேரம், இதே பாடங்களுக்கு சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒரு லட்சம் வரை ஊதியம் பெறுகிறார்கள். ஒரே தகுதியுள்ள எங்களுக்கும் அதேபோல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்கிறோம்.
எங்களுக்கு ஊதியம் வழங்க ஆண்டுக்குச் சுமார் ரூ. 200 கோடி ரூபாய் செலவாகிறது. காலமுறை ஊதியம் வழங்க கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கினால்போதும்.
தற்போது உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 1,328 பேரைப் புதிதாக நியமிக்க உள்ளார்கள். அதற்கு உடற்கல்வி பாடத்தில் 15 ஆண்டு அனுபவத்துடன் பணிபுரிகின்ற 3,843 பகுதிநேர ஆசிரியர்களையே பணி நிரந்தரம் செய்யலாம்.
இதைப் போலவே மற்ற பாடங்களில் 15 ஆண்டுகளைக் கடந்த பகுதிநேர ஆசிரியர்கள்களையும் பணி நிரந்தரம் செய்யலாம்.
வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் என அரசின் எந்தப் பலன்களும் இல்லாததால் வாழ்வதே கேள்விக்குறியாகி வருகிறது. எங்களில் பலர் 50 வயதைக் கடந்து விட்டார்கள்.
மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விளிம்பு நிலையிலிருந்து வந்த பெண் ஆசிரியர்கள் அதிகம் உள்ளார்கள். ஊதியம் போதாமல் கடன்காரர்களாகி வருகிறார்கள்.
மனிதாபிமானத்துடன் அணுகி த.வெ.க அரசு எங்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் வலியுறுத்தியபோது 'நிச்சயம் நிரந்தரம் செய்து முதல்வர் உத்தரவிடுவார்' என்று பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார். ஆனால், பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை, அதனால் 110 விதியிலாவது அறிவிக்க வேண்டும் என்கிறோம், மீதமுள்ள சில ஆண்டுகளாவது நிம்மதியாக வாழ விரும்புகிறோம்" என்றார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "ஒரு நாளைக்குக் குறைந்த நேரமே பள்ளியில் பணி இருக்கும். முழுநேர ஆசிரியர்களாகக் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்துவதில் நடைமுறை பிரச்னைகள் உள்ளது. அதேநேரம், அரசு கொள்கை முடிவெடுத்தால் அவர்களின் கோரிக்கை நிறைவேறலாம்" என்றார்கள்.
இதுகுறித்து விளக்கம் கேட்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனைப் பலமுறை தொடர்புகொண்டும் அழைப்பை எடுக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பியும் தொடர்பில் வரவில்லை.















