‘எங்களுக்கு கார் வேண்டாம், எம்.பி அலுவலகம் வேண்டும்’ – ஜோதிமணி எம்.பி கோரிக்கை
‘எங்களுக்கு கார் வேண்டாம், எம்.பி அலுவலகம் வேண்டும்’ – ஜோதிமணி எம்.பி கோரிக்கை
கோவை திவ்யோதயா அரங்கில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் நடந்தது என்ன என்ற தலைப்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோதிமணி, ”தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் எந்த மாற்று நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. 543 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும். இதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். இதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கு இடம் இல்லை.
பா.ஜ.க எதிர்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி இருக்கிறது. த.வெ.க புதிதாக முன் அனுபவம் இன்றி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் என வரும்போது, அவர்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். தமிழகத்தின் உரிமைகளில் எந்த வித சமரசமும் செய்யவில்லை. இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். இதில் எந்த குழப்பமும் இல்லை. ராகுல் காந்தியால் மட்டும்தான் நரேந்திர மோடியை வீழ்த்த முடியும். இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவருமே ராகுல் காந்தியை முன்னிறுத்தி தான் செயல்படுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுவை என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் நீண்ட நெடிய அரசியல் பயணம் மேற்கொண்ட ஒரு கட்சி என்பதால், பொறுப்பான முறையில் முடிவு எடுப்பார்கள் என நம்புகின்றேன். மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை நிலைப்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி எது நியாயமோ அதை ஏற்றுக் கொள்வோம். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் தீர்ப்பை ஏற்கின்றோம். மேகதாதுவில் அணை கட்ட ஒரு கல்லை கூட வைக்க விட மாட்டோம்” என்றார்.
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என தமிழக முதல்வர் விஜய் சொல்வாரா என்ற கேள்விக்கு, “அவர்களுக்கு ஒரு நேரம் கொடுக்க வேண்டும். அதற்கு நேரம் வரும்போது செல்வார். தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டு காலம் இருக்கிறது. ஒரு அனுபவம் இல்லாத அரசாங்கம், அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என த.வெ.க சொல்லவில்லை” என பதிலளித்தார்.

விஜய் பிரதமர் வேட்பாளர் என்றால் காங்கிரஸ் ஆதரிக்குமா என்ற கேள்விக்கு, “ராகுல் காந்தி மட்டுமே இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக இருப்பார், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை” என பதிலளித்தார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்த கேள்விக்கு, “அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற, உறுப்பினர்கள் வசதியாக இருப்பதில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால் அடிப்படையான சில விஷயங்கள் செய்து கொடுக்க வேண்டும். தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என அலுவலகம் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என தனியாக ஒரு அலுவலகம் கட்டிக் கொடுக்க வேண்டும். நாங்கள் கார் கேட்கவில்லை. எல்லாரும் கார் வைத்து இருக்கின்றோம்” என பதிலளித்தார்.














