'ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன் உடைந்த துப்பாக்கி!' - உண்மையான சஞ்சய் விஸ்வந...
'ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன் உடைந்த துப்பாக்கி!' - உண்மையான சஞ்சய் விஸ்வநாதன் யார் தெரியுமா?
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அந்தப் படத்தில் சூர்யா ஒரு துப்பாக்கிச்சுடும் வீரராக நடித்திருந்தார். படத்தில் அந்த கதாபாத்திரம் நிஜத்தில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் கதையை ஒத்ததாக இருக்கும்.

'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் சஞ்சய் விஸ்வநாதனாக நடித்திருக்கும் சூர்யாவின் அறிமுக காட்சியே ஒலிம்பிக்ஸின் நடப்பதைப் போல காட்சிப்படுத்தப்பட்டுருக்கும். 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸின் இறுதிப்போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு சஞ்சய் விஸ்வநாத் வெல்லக்கூடாது என்பதற்காக ஒரு கும்பல் அவரின் துப்பாக்கியை உடைத்து விடும். பரபரப்பான அந்த சூழலில், நிதானம் இழக்காத சஞ்சய் துப்பாக்கியை அவரே உட்கார்ந்து சரி செய்வார். அந்த துப்பாக்கி கொண்டு போய் இறுதிப்போட்டியில் இலக்கை துளைத்து தங்கம் வெல்வார்.
இந்த சம்பவம் திரைப்படத்திற்காக கொஞ்சம் புனையப்பட்டதாக இருந்தாலும், நிஜத்திலும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் அபினவ் பிந்த்ராவுக்கு அதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தது. 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் கலந்து கொண்டிருந்தார் இறுதிப்போட்டிக்கு முந்தைய தகுதிச்சுற்றில் அபினவ் மிகச்சிறப்பாக இலக்கை துளைக்கிறார். இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெறுகிறார். சிறிது நேர இடைவேளையில் இறுதிப்போட்டி.

அதற்கு முன்பாக பயிற்சி செய்ய ஒரு சில நிமிடங்கள் வழங்கப்படுகிறது. எல்லா வீரர்களை போல அபினவ்வும் பயிற்சியை தொடங்குகிறார். ஆனால், நினைத்ததைப் போல அவரால் இலக்கை துளைக்க முடியவில்லை. எதோ தவறாக இருப்பதை உணர்கிறார். துப்பாக்கியின் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கிறார். அப்போதுதான் ஒரு அதிர்ச்சி. துப்பாக்கியின் 'Sight' பகுதியில் ஒரு பிரச்னை. இதை தானாக தவறுதலாக விபத்தாக நடந்ததா இல்லை யாரும் வேண்டுமென்றே துப்பாக்கியை பழுதாக்கிவிட்டார்களா என எதுவும் தெரியவில்லை.
இறுதிப்போட்டிக்கான நேரம் நெருங்குகிறது. அபினவ்வின் டீம் செய்வதறியாமல் நிற்கின்றனர். அபினவ் மட்டும் பதட்டமடையவில்லை. நிதானம் இழக்காமல் பொறுமையாக உட்கார்ந்து பழுதான பகுதியை இயன்றளவுக்கு சரி செய்கிறார். அந்த துப்பாக்கியோடு போட்டியிலும் கலந்து கொள்கிறார். முடிவு ஒரு வரலாறு. ஒலிம்பிக்ஸில் தனி நபர் பிரிவுகளில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் அபினவ். இந்தியாவின் தேசியக் கொடி மேலேற அந்த ஒலிம்பிக்ஸ் அரங்கில் தேசிய கீதம் ஒலித்தது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் அபினவ் பிந்த்ராவுக்கு 2008 ஒலிம்பிக்ஸில் நடந்த சம்பவத்தைதான் சினிமா புனைவோடு காட்சிப்படுத்தியதை போல இருக்கும்.



















