Mettur: வினாடிக்கு 7,000 கன அடி; 8 கண் மதகுகள் வழியாக சீறிப்பாயும் நீர் - கழுகு ...
'அதிமுக-வுக்கே யூடர்ன்?' - கடுப்பில் தவெக நிர்வாகிகள்; குழப்பும் இசக்கி சுப்பையா!
`இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் வரை மீண்டும் எம்.எல்.ஏவாக பணி செய்ய அனுமதிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் தவெகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பையா.

வித்தியாசமாக குழப்பியடிப்பதோடு 'அதிமுகவில் அநியாயமாக தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதினார்கள்' என அதற்கு நியாயம் கேட்பது போல இசக்கி சுப்பையா பேசி வருவதால் லோக்கல் தவெக நிர்வாகிகள் அவர் மீது கடுப்பில் இருக்கின்றனர்.
இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட சீனியர் நிர்வாகிகள் சிலர், 'இசக்கி சுப்பையா அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்தார். அதிமுகவில் திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தார். தவெகவிலும் அதே பதவியை எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்ததை போலவே திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் என இரண்டு பதவிகளை தலைமை அவருக்கு வழங்கியது.

கட்சியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் 30 ஆண்டுகளாக இயக்கத்துக்காக உழைத்தவரிடமிருந்து ஓரு மாவட்டத்தையே பிடுங்கி இவரிடம் மொத்தமாக ஒப்படைத்துவிட்டார்கள். இதைவிட அவருக்கு வேறு என்ன முக்கியத்துவம் வேண்டும்? ஆனால், அவருக்கு கட்சி அளிக்கும் முக்கியத்துவத்துக்கு ஏற்ப தொகுதிக்குள் அவர் வேலை பார்ப்பதே இல்லை.
தலைவரின் பிறந்தநாளுக்கு அவர் தரப்பில் ஒரு போஸ்டர் கூட அடிக்கவில்லை. மாவட்டச் செயலாளர் போஸ்டிங் கிடைத்தால் செலவழிக்கலாம் என கமுக்கமாக இருந்துவிட்டார். இது அதிமுக வலுவாக இருக்கும் தொகுதி. இரட்டை இலைக்காக ஓட்டு கேட்டுதான் வென்றார். இப்போது அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பதால் கணிசமான எண்ணிக்கையில் அதிமுக அனுதாபிகள் இவர் மீது கடுப்பில் இருக்கின்றனர்.
இடைத்தேர்தலில் வெல்ல வேண்டுமெனில் இப்போதே அவர் களத்தை தயார் செய்ய தொடங்க வேண்டும். தளபதிக்காக நீண்ட காலமாக உழைத்த நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். எதையுமே செய்யாத இசக்கி சுப்பையா இப்போது வந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ போஸ்டிங்கே திரும்பக் கேட்டு குழப்புகிறார். தளபதியே இடைத்தேர்தலை மீண்டும் நடத்த வேண்டுமென மனுத் தாக்கல் செய்கையில், இவர் அதற்கு நேர்மாறாக இப்படியொரு மனுவை தாக்கல் செய்வது தலைமைக்கே எதிரான செயலாக இருக்கிறது. அவர் அதிமுகவுடன் மீண்டும் பேசத் தொடங்கி விட்டாரோ எனும் சந்தேகம்தான் எங்களுக்கு எழுகிறது. இதுதொடர்பாக தலைமைக்கும் புகாரை எடுத்து செல்வோம்' எனப் பொருமுகின்றனர்.
இசக்கி சுப்பையா தரப்பில் பேச்சு கொடுக்கையில், 'தவெகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கோ அமைப்புச் செயலாளர் பதவிக்கோ எந்த அதிகாரமும் இருப்பதாக தெரியவில்லை. லோக்கல் நிர்வாகிகளும் அண்ணனுக்கு ஒத்துழைத்துப் போவதில்லை. அதனால் அண்ணனே கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருக்கிறார். இடைத்தேர்தல் சீக்கிரமாக வந்தால் வென்று அமைச்சர் பதவிக்கு மூவ் செய்யலாம் என நினைக்கிறார். அதற்காகத்தான் நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருக்கிறார். மற்றபடி வேறெந்த பிரச்னையும் இல்லை' என்கின்றனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் புகைய தொடங்கியிருக்கும் பிரச்னைகளுக்கு தலைமை முகம் கொடுக்குமா என்பதே தவெக நிர்வாகிகளின் கேள்வியாக இருக்கிறது.!













