தனியார் பல்கலை.,: "தவெக-விடம் பாஜகவின் போக்கு.!" - அமளிக்கு மத்தியில் சைலன்டாக ந...
"அமைச்சர் நிர்மல்குமார் கண்ணியக் குறைவாக பேசவில்லை.. பேசியது தி.மு.க-தான்! - விசிக எழில் கரோலின்
விடுதலை சிறுத்தைகள் கட்சிமீதான தே.மு.தி.க-வின் விமர்சனம், வி.சி.க-வின் இடைத்தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஏழில் கரோலினிடம் பேசினேன்.
"அமைச்சர் பதவிக்காகவே த.வெ.க கூட்டணியில் இணைந்திருப்பதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா சொல்கிறாரே!"
"2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 107 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது தமிழக வெற்றிக் கழகம். மக்கள் முடிவுகளுக்கு மாறாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வின் இசைவோடு ஆட்சியமைக்க ஒருபக்கம் முயல்வதாகவும் மறுபக்கம் குடியரசு தலைவர் ஆட்சியை பா.ஜ.க நிறுவ முயல்வதாக சொல்லப்பட்டன. அந்த இக்கட்டான சூழலில் த.வெ.க ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தோம்.

"நிபந்தனையற்ற சொல்லிவிட்டு பிறகு அமைச்சரவையில் பங்கெடுத்தது ஏன் எனக் கேட்கிறார்களே!"
"வி.சி.க என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை தே.மு.தி.க-விடமும் தி.மு.க-விடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. த.வெ.க-வை கடந்த காலங்களில் விமர்சித்து பிரசாரம் செய்தோம். எனவே த.வெ.க-வின் நடவடிக்கைகளை உறுதிசெய்த பின்னர் அமைச்சரவையில் இடம்பெற்றோம். வி.சி.க-வின் நகர்வுகள் அனைத்துமே ஜனநாயகப் பூர்வமான முறையிலேயே அமைந்தன. ஆனால், தலித் மக்கள் உரிமைக் குரலாய் ஓங்கி ஒலிக்கும் வி.சி.க அதிகாரத்தில் அமர்ந்துவிட்டதே என பலரும் கொந்தளிக்கிறார்கள். அந்த வரிசையில் அக்கா பிரேமலதாவும் கொந்தளிக்கிறார். அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை. சீட்டுக்காகவும் வேறு சில டிமாண்ட்டுக்காகவும் பேரம்பேசும் தே.மு.தி.க-வுக்கு எங்களை விமர்சிக்கும் தகுதியில்லை"
"எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் இருக்கும் தி.மு.க-வை தாக்குவது ஏன்?"
"சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் அவர்கள் மிசா சட்டத்தில் தி.மு.க தலைவர் அண்ணன் ஸ்டாலின் கைதாகவில்லை என்ற தொனியில் பேசியதை வி.சி.க உள்ளிட்ட பல அமைப்புகளை ஏற்கவில்லை. அண்ணன் ஸ்டாலின் அவர்களும் 'முதல்வர் கண்ணியமாக பேச வேண்டும்' என வீடியோ வெளியிட்டார். அதுவரை நாங்கள் தி.மு.க-வை விமர்சிக்கவில்லை. ஆனால், முதல்வர் விஜய்யை கண்டித்து தி.மு.க-வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் மாவட்டச் செயலாளர்களும் முக்கிய புள்ளிகளும் பேசிய விதம் கடும் கண்டனத்துக்குரியது. த.வெ.க அமைச்சர்கள் பேசியவற்றை கண்டிப்பது அவர்கள் உரிமை, அதேநேரம் 'பிறப்பு' குறித்து தரம்தாழ்ந்து பேசும் அளவுக்கு தி.மு.க தரக்கெட்டு பேசும்போது வேடிக்கை பார்க்க முடியுமா.?

"அமைச்சர் நிர்மல்குமார் எல்லைமீறி அவதூறு பரப்புவதாக சொல்கிறார்களே!"
"ஆளும்கட்சியையும் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும் எதிர்க்கட்சியை ஆளும்கட்சி விமர்சிப்பதும் இயல்புதான். ஆனால், பெண்களையும் பிறப்பையும் குறித்து வைத்து தாக்குவது என்னமாதிரியான அரசியல்? அமைச்சர் நிர்மல்குமார் எங்காவது பெண்களையோ, பிறப்பு குறித்தோ பேசினாரா.. அரசியல் குற்றச்சாட்டுகளைதானே வைத்தார்.. பதிலுக்கு தி.மு.க-வும் அரசியல்ரீதியாக பதிலளிக்காமல் தனிப்பட்ட தாக்குதல்களை செய்கிறார்கள். அண்ணா, பெரியார், கலைஞர், கண்ணியம், கட்டுபாடு, கொள்கை என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க-வினர் உண்மைமுகம் இதுதானா என்ற கேள்வியை நாங்கள் முன்வைத்தோம். அதிலென்ன தவறு இருக்கிறது?"
" 'த.வெ.க-வின் குதிரைபேரத்தால் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் இது' என்கிறார்களே!"
"மதுராந்தகம் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் ஒருசிலர் மனுதாக்கல் செய்தபோது நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். த.வெ.க வேட்பாளர்களின் வேட்புமனுவை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துவிட்டது. எனவே சட்ட நடைமுறைக்கு உட்பட்டுதானே தேர்தல் நடக்கிறது. எந்தவித அழுத்தத்துக்கும் உட்படாமல்தான் நாங்கள் ராஜினாமா செய்திருக்கிறோம் என மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் சபாநாயகரிடம் விளக்கமாக எடுத்துரைத்திருக்கிறார்கள். எனவே குதிரைபேர குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாக தெரியவில்லை"
"கம்யூனிஸ்டுகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து...?"
"த.வெ.க அரசுக்கான ஆதரவு தொடரும் எனச் சொல்லிக் கொண்டு த.வெ.க-வுக்கு எதிரான வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது குழப்பமாகவே இருக்கிறது. எது எப்படியோ மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் வெல்லும்"

















