'நானே மாடுபிடி வீரர்தான்...!' - சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கரு...
ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!
சேலம் மாவட்டம் இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மையத்தின் உற்பத்திப் பிரிவு துணைப் பொது மேலாளராக பதவி வகித்து வரும் சாரதா என்பவர் கடந்த சில வருடங்களாகவே ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் நெய் , வெண்ணையை திருடிச் சென்று வெளியில் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சாரதாவின் அலுவலக அறைக்குள் ஆவின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது , சாரதா பயன்படுத்தி வந்த மேஜைக்குள் 40 கிலோ நெய் டப்பாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி ஆவின் நிறுவனம் மீதான பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் முதற்கட்டமாக சாரதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆவின் நிறுவன துணை பொது மேலாளர் வருடக்கணக்கில் நெய், வெண்ணெய் போன்றவற்றை திருடிச் சென்று வெளியில் விற்பனை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சாரதா மீது முறையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.



















