நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கி...
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்
நேபாளத்தின் நாராயணி ஆற்றங்கரையில், கடும் வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் கம்மலை இருவர் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சித்வான் மாவட்ட போலீஸார் 25 மற்றும் 38 வயதுடைய இருவரைக் கைது செய்துள்ளனர்.
செல்போனில் சிக்கிய வீடியோ
வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பெண்ணின் உடலை இருவர் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கரைக்கு இழுத்து வந்து, பின்னர் அவரது காதுகளில் இருந்த தங்கக் கம்மலை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த சிலர் இந்தச் சம்பவத்தை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
போலீஸார் கைது நடவடிக்கை
இந்தச் சம்பவத்தின் 41 விநாடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து வீடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டனர்.
மதன் குரூங் (25), உமேஷ் சௌத்ரி (38) ஆகிய இருவரையும் பரத்பூர் பகுதியில் உள்ள பொக்காரா பேருந்து நிலையம் அருகே ஆகஸ்ட் 27-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
मृतकको कानको मुन्द्रा चोरी गर्ने व्यक्तिहरु नियन्त्रणमा लिएको सम्बन्धमा । pic.twitter.com/pnPlnQPn9j
— Nepal Police (@NepalPoliceHQ) August 27, 2026
காவல்துறை எச்சரிக்கை
இதற்கிடையே, நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளனர். இந்தச் சூழலில், உயிரிழந்தவர்களின் உடமைகளைத் திருடுவது போன்ற செயல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது.



















