முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை - சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய...
`கொலை குறித்த பாடல்' இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் ஹரியானா பாடகர் உ.பி.யில் சுட்டுக்கொலை!
ஹரியான பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் (32) உத்தரப்பிரதேசத்தில் ஜிம்மிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சாம்லி மாவட்டத்தில் உள்ள கோட்வாலி என்ற நகரில் உள்ள ஆர்யபுரி நாலா பத்ரி அருகே இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் ஜிம்மிற்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் ஜிம்மில் இருந்து பாலியன் வெளியில் வருவதை எதிர்பார்த்து காத்திருந்தனர். பாலியன் ஜிம்மில் இருந்து வெளியேறி தனது ஸ்கார்பியோ காரை நோக்கிச் சென்றபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள பாலியன் காரின் ஓட்டுனர் பகுதியில் நுழைந்தார். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்தின் கதவை இழுத்துத் திறந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 18 ரவுண்டுகள் சுடப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து தோட்டாக்கள் பாலியனின் தலை மற்றும் வயிற்றில் தாக்கியது. மூன்று தோட்டாக்கள் ஸ்கார்பியோவின் முன்பக்க கண்ணாடியை தாக்கியது.

குற்றவாளிகள் உடனே சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். இதையடுத்து பாலியன் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவரை சோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யவும், கொலைக்கான நோக்கத்தை அறியவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் என்.பி.சிங் தெரிவித்தார். ஜிம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் சரிபார்த்து வருகின்றனர். மேலும் ஹரியானாவில் பாலியனுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த கொலையானது பாலியனின் ஆதரவாளர்கள் மற்றும் கிராமவாசிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது, அவர்கள் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் டெல்லி-முசாபர்நகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். பாலியனின் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். பாலியன் தாயார் மடியில் பாலியன் தலையைப் பிடித்துக் கொண்டு, "சத்தம் போடாதீர்கள், என் மகன் தூங்குகிறான். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று மக்களிடம் கெஞ்சுவது போன்ற காட்சிகளை காணமுடிந்தது. கொலைக்கு சிறித்து நேரத்திற்கு முன்புதான் பாலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொலை தொடர்பான ஒரு ஹரியானி பாடலை பதிவேற்றம் செய்து இருந்தார். இக்கொலையை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அப்பாடலை பகிர்ந்து வருகின்றனர்.

















