Kriti Sanon Bikini Ad Controversy: "அவரை யார் தடுத்தது?" - மீண்டும் கிருத்தி சனோ...
கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதல்; இரண்டு டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழப்பு - குளித்தலை சோகம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (48). இவர், கரூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரியில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த மேகநாதன்(37) என்பவர் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு காங்கேயம் சென்றார்.

அப்போது, சம்பவ இடத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய இரண்டு டிரைவர்களின் உடல்களையும் கிரேன் உதவியுடன் மீட்டனர்.
மேலும், லாரிகளுக்கு பின்னால் வந்த 2 கார்களின் முன்பகுதி மட்டும் சேதம் ஏற்பட்டது. குளித்தலை போலீஸார் இரண்டு உடல்களையும் மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடல் கூராய்வுக்காக அனுமதித்தனர். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் வெகு நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், குளித்தலை போலீஸார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


















